புகழேந்தி
இலங்கைக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கான் வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சரிவிலிருந்து மீண்டு ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.
அந்த அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் சதம் கடந்த நிலையில் களத்தில் உள்ளார். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. இப்ராஹிம் சத்ரானுக்கு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிவரும் ரஹ்மத் ஷா 46 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இந்த இணைப்பாட்டத்தைப் பிரிக்க முடியாது இலங்கை அணி வீரர்கள் திணறி வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் 199 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆப்கான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இவ்வாறு எழுச்சி கொள்ளுமென இலங்கை வீரர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் விக்கெட்டுக்களை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியைப் பெறலாம் எனக் கணித்திருந்தனர்.
ஆனால், அப்கான் வீரர்கள் இலங்கை அணியின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி விட்டனர். இன்னும் 42 ஓட்டங்களைப் பெற்றால் போதும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க. ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்றுள்ள அந்த அணி, இன்று முழு நாளும் துடுப்பெடுத்தாடினால் நாளை இலங்கைக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கிறது. சில வேளை இலங்கை தோல்வியைத் தழுவும் வாய்ப்பும் உள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.