(எழிலன்)
கேகாலை, வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் கடந்த திங்கட்கிழமை (11) அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசதலைவரின் மூத்த ஆலோசகர் மற்றும் அரச தலைவர் செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, அரசதலைவரின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷுமாரசிங்க, தலைமை அமைச்சரின் மேலதிக செயலாளரும் நாடாளுமன்ற சபை முதல்வரின் செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன, அரச தலைவர் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் இலங்கை வைப்பகத்தின் நாடாளுமன்றக் கிளையின் முகாமையாளர் இசுரி கீகனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகையில், இணைப்பாடவிதான செயற்பாடாக மாணவர் நாடாளுமன்ற எண்ணக்கருவை பாடசாலைக் கட்டமைப்பில் பரவலாக்குவதன் மூலம் நாடாளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான அறிவை
மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசதலைவரின் மூத்த ஆலோசகர் மற்றும் அரசதலைவர் செயலணியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, மாணவர் நாடாளுமன்ற எண்ணக்கருவின் மூலம் மாணவர் தலைமுறையினர் நாடாளுமன்றத்தின் பொறுப்புக்கள் பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக செயற்படுவதற்கான பயிற்சியை பெறுவதற்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கை நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன இங்கு குறிப்பிடுகையில், ஜனநாயகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு மாணவர் நாடாளுமன்ற எண்ணக்கரு மிகவும் முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார்.
வேரகல கனிஷ்ட வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், தலைமை அமைச்சர்கள் மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அத்துடன், வருகை தந்த அதிதிகளினால் மாணவர்
நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், இலங்கை வைப்பகத்தின் நாடாளுமன்றக் கிளையினால் பாடசாலையின் 37 மாணவர்களுக்கு நிதி வைப்பிலிடப்பட்ட 37 வைப்பகக் கணக்குகள் திறந்து அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், பாடசாலைக்கு ஒலிபெருக்கியொன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இதன்போது இலங்கை நாடாளுமன்றத்தினால் வேரகல கனிஷ்ட வித்தியாலயத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், மாணவர் நாடாளுமன்றத்தை நிறுவுவதற்கான பங்களிப்புக்காக இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பணிமனைக்கும் அதற்கு ஒத்துழைப்பு
வழங்கியவர்களுக்கும், அதிதிகளுக்கும் பாடசாலையினால் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பணிமனை மற்றும் அரசதலைவர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பணிமனை அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர் கீதானி சுபசிங்க, வேரகல கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர்
எம்.எம். சாந்தணி திலகரத்ன, மாணவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் சுரணி மஹேஷிகா விக்ரமசிங்க உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.