(எழிலன்)
மார்ச் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்
பிரேரணையை மார்ச் 19 செவ்வாய்கிழமை மற்றும் 20ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில்
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் தலைமையில் இன்று (14) கூடிய நாடாளுமன்ற
அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பதில் செயலாளர்
நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய, மார்ச் 19ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும், 20ஆம் திகதி
புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறவுள்ளது.
இரண்டாவது நாளான 20ஆம் திகதி பி.ப 4.30 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரரணை தொடர்பான
வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மார்ச் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல
விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி
முதல் பி.ப 5.00 மணி வரை சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்புத்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன குறித்த விவாதம்
நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய
அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களான எம்.கருணாரத்ன,பந்துல பஸ்நாயக்க மற்றும்
(மருத்துவ கலாநிதி) பி.எம்.பி.சிறில் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணையை எடுத்துக்
கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.