வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழாவொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வீட்டில் இனந்தெரியாத குழுவொன்று நுழைத்து ஆயுதங்களினால் தாக்கி தீயிட்டு எரித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒரு பிள்ளையின் தந்தையும் உயிரிழந்தார்.
சுகந்தன் என்ற 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் நுழைந்த 8 பேர், அங்கிருந்த சிறுவர்கள் உட்பட அனைவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கியிருந்தனர்.
பின்னர் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியதில் சுகந்தனின் மனைவியான 21 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்களை கைது செய்ய பல குழுக்கs; விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.