போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் தொடங்கப்பட்ட தரைவழி தாக்குதலால் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்ததால் இணைய சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து கேபிள்களும் சரிசெய்யப்பட்டதையடுத்து இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 20 நாட்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முடங்கிய இணையதள சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல், தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் காசாவில் மீண்டும் சரிசெய்யப்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்கள், இணையதள குழு உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஸ்டார் லிங்க் மூலம் இணைய சேவை வழங்க தயார் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை காசாவில் உள்ள மக்களுக்கு வழங்குவதாகக் கூறினார்.
இது இஸ்ரேலின் எதிர்ப்புகளை தூண்டியது, “ஹமாஸ் இதை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்” என்று இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.