ஆதவன்
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருத்துவ அறிக்கையின்படி அவரது இறப்புக்குக் கடுமையான சித்திரவதைகளும், தாக்குதல்களுமே காரணம் என்பது தெளிவாகியிருக்கின்றது. இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞர் சில நாள்கள் பொலிஸ் நிலையத்தில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்று தெரிகின்றது. பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கக் கடுமையான சித்திரவதைகளைச் செய்தனர் என்று உயிரிழந்த இளைஞரின் வாக்குமூலம் அடங்கிய காணொலி ஒன்று வெளியாகி, நெஞ்சைப் பதறவைத்திருக்கிறது.
இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும், தாக்குதல்களும் புதியவைல்ல. ஆண்டு தோறும் சுமார் 100 வரையான இத்தகு சம்பவங்கள் நடப்பதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் அமிழ்த்திப் புதைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பொலிஸார் சந்தேகநபர்களீடம் இருந்து வாக்குமூலம் அல்லது சாட்சியம் என்பவற்றைப் பெறுவதற்காகவே சந்தேகநபர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர். வட்டுக்கோட் டைப் பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்திலும் இதுவே நடந்திருக்கின்றது. இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகளில் இருந்து தப்பிக்கொள்ளமுடியும் என்பதைப் பயன்படுத்திப் பொலிஸாரால் இவ்வாறான குற்றங்கள் மிகச் சுதந்திரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகாலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போதும், அவர்கள் மிகக் குறைந்த தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர் அல்லது இடமாற்றப்பட்டனர். பெரும்பாலானோர் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டனர். இவையெல்லாம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் நாம் எதையும் செய்யலாம் என்ற மனத்துணிவினை உண்டாக்கி, அதன் நீட்சியாகவே தொடர்ந்தும் இவ்வா றான சித்திரவதைகள் தொடர்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்களும் பாதுகாப்புத் தரப்பிழைக்குத் தவறான முன்னுதாரணமாகியுள்ளனர். ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் இலாபம் கருதி எடுக்கும் தீர்மானங்கள் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளும் இவ்வாறான சித்திரவதை, கொலைச் சம்பவங்களுக்கு உந்துதலாக இருக்கின்றன என்பதையும் மறுதலிக்கமுடியாது, மிருசுவிலில் 9 அப்பாவிப் பொது மக்களைக் கோரமாகக் கொன்றவர், நாட்டின் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம். இப்படியான பல உதாரணங்கள் இந்த நாட்டில் உள்ளன. இவை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இடையே தங்களது செயல் சரியானது என்ற மனப்பாங்கை வளர்த்துவிட்டிருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் நடைமுறைகள் அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட்ட போதும், அவை வெறும் எழுத்துவடிவில் இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு வருவது அரிதே. இதுவும் இவ்வாறான குற்றங்கள் தொடர்வதற்கு ஒரு காரணம். ஒருவரைச் சித்திரவதைப்படுத்துவது தண்டனைக்குரிய, ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் என்று இலங்கைச் சட்டம் குறிப்பிடுகின்றது. ஒருவர் ஏதேனும் குற்றத்தைப் புரிந்தவரானாலும் அவர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இவ்வாறான தடுப்புக்காவல் சித்திரவதை அல்லது கொலைகளைத் தடுக்க சட்டத்தின் இறுக்கமான போக்கால் மட்டுமே முடியும். தற்போது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்க வழிகோலும் சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சித்தன்கேணி இளைஞனுக்கு, சாவின் பின்னராவது நீதி கிடைக்குமா? [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.