[ஆதவன்]
அரசமைப்புப் பேரவை என்பது ஒரு முக்கியமான அமைப்பு. அதிலே வடக்கு- கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்கூட இல்லாமல் இருப்பது தேசிய வாழ்க்கையில் இருந்து எம்மை அப்புறப்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் வைத்து நேற்றுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசமைப்புப் பேரவையில் சித்தார்த்தனின் பெயரை நாம் முன்மொழிந்தோம். எதிர்க்கட்சிகளில் இரண்டாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றில் நாம் இருக்கின்றோம். ஆகவே அவருக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். துரதிஷ்டவசமாக அரசபக்கத்தில் இருந்து பலர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக அமர்ந்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை எங்களது எண்ணிக்கையினை
விட கூடுதலாகவுள்ளது. இதனால் அந்த விடயம் முடிவில்லாமல் நிறைவடைந்திருக்கின்றது.
சபாநாயகர் இது தொடர்பாக தெளிவான ஒரு முடிவினை எடுக்காமல் இருக்கிறார். எம்மோடு பேசும்போது அந்த பிரதிநிதித்துவம் உங்களுக்குத்தான் என்று சொல்கிறார். ஆனால், அந்த உத்தரவை அவர் செய்ய மறுக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவரும் எமது நிலைப்பாட்டோடு இணங்கியிருக்கின்றார். பெரமுனவின் பொதுச்செயலாளரும் அதற்கு இணங்கியிருக்கின்றார். இதனை நாடாளுமன்றிலே ஒரு தீர்மானமாகக்கூட நிறைவேற்றி செயற்படுத்தலாம்.
முதலாவது குடியரசு அரசமைப்பு உருவாக்கப்படும்போது பேரினவாத நோக்குடன் எவ்வாறு எம்மை தேசிய வாழ்க்கையில் இருந்து புறக்கணித்தார்களோ அவ்வாறான ஒருநிலமை மீண்டும் நடைபெறும் அறிகுறியாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது- என்றார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.