ஆதவன்
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 107ஆவது துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் முடிவுற்றது.107ஆவது பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங் களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் ஜோன்சன் 63 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றுக்கொண்டார். புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் செகான், அபிலாஷ் ஆகியோர் தலா 3 இலக்குகளை வீழ்த்தினார்கள். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் மதுசன் 39 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் யாழ்ப்பாணக்கல்லூரி வீரர் விஷ்ணுகோபன் 6 இலக்குகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 7 இலக்குகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணி சார்பில் விஷ்ணுகோபன் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சாருசன் 5 இலக்குகளை வீழ்த்தினார். பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 13 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனடிப்படையில் 107ஆவது பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.
போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் ஜோன்சன், சிறந்த பந்து வீச்சாளராக யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் விஷ்ணுகோபன், சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் ஜோன்சன், சிறந்த சகலதுறை வீரராக புனித பத்திரிசியார் கல்லூரி வீரர் சாருஜன், போட்டியின் ஆட்டநாயகனாக யாழ்ப்பாணக்கல்லூரி வீரர்விஷ்ணுகோபன் ஆகியோர் தெரிவானார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.