இலங்கை அதன் பொறுப்புக்கூறல் கடமைகளில் தொடர்ந்தும் பலவீனமானதாகவே செயற்படுகின்றது. 'உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு' அமைக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையைக் கண்டறியக்கூடிய அல்லது நீதியை நிலைநாட்டக்கூடிய சூழல் இலங்கையில் இப்போதில்லை என்றவாறாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில், இலங்கை தொடர்பான தனது வாய்மொழி அறிக்கையை முன்வைக்கும் போதேவோல்கர் இந்தக் கருத்தை - தன் நிலைப்பாட்டை - பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தனக்கு எதிரான போர்க்குற்றங்களை எதிர்கொள்வதற்காக இலங்கை கடந்த சில மாதங்களா கவே கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. அதில் ஒன்றுதான், தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சியாகும். தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறிக்குத் தீர்வு காண்பதற்காக இந்த ஆணைக்குழுவை அமைக்கும்போது, அந்த ஆணைக்குழுவின் சுயாதீனச் செயற்பாட்டையும், நீதியைநிலைநாட்டுவதற்குரிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களையும் தென்னாபிரிக்கா ஆழமாக உறுதிப்படுத்தியது. தென்னாபிரிக்காவைப் போன்ற 'இயங்குதளம்' இலங்கையில் இல்லை என்பதால், இங்கு அமைக்கப்படும் 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' சுயாதீனச் செயற்பாடுகள் மற்றும் நீதியைக் கண்டடைவதற்கான செல்நெறிகள் தொடர்பில் பெரும் விவாதப்புள்ளியும் ஐயக்குறியுமே எஞ்சிகயிருந்த நிலையில், உண்மையைக் கண்டறியக்கூடிய அல்லது நீதியை நிலைநாட்டக்கூடிய சூழல் இலங்கையில் இப்போதில்லை' என்ற கருத்தை காலக் கண்ணாடியாக வெளிப்படுத்தும் வகையில் தான் வோல்கரின் கருத்துகள் அமைந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச்சட்டம், பாதுகாப்புத்துறைக்குள் செய்யப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் என்பன தொடர்பிலும் வோல்கர் தன் அதிருப்தியைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். இலங்கை அதன் வெளிவிவகாரக் கொள்கையைத் திருத்தியமைத்து, அணிசேரா நாடுகளை அரவணைத்து தனக்கான ஆதரவுத் தளத்தைப் புதிதுபுதிதாக ஏற்படுத்தி வேறுபட்ட பயணப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்ததால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வு தொடர்பில் ஒருவித பயம் 'பாதிக்கப்பட்ட சமூகமான' ஈழத்தமிழர்கள் மட்டில் இருக்கவே செய்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வோல்கரின் பிடிதளரா நிலை, ஈத்தமிழர்களுக்கு ஓர் ஆறுதல் பெருமூச்சே.
அதே வேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுக்கமான பிடிக்குள் இருந்து திமிறித் திரிய இலங்கை காலாகாலமாக முயன்று கொண்டிருப்பதும் பட்டவர்த்தனமானதே. சட்டவியாக்கியானங்கள், அணிகளைச் சேர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் என்பவற்றை தன் 'அவகாச மனோநிலையின்' பாற்பட்டு ஐக்கிய -நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கிக் கொண்டிருப்பதுதான் இலங்கைக்கான பிடி மானங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. இதை உணர்ந்து 'அவகாசத்தை வழங்கும் அட்சய பாத்திரம்போன்று' ஐ.நா. செயற்படக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.
(03.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.