அடக்குமுறையால் நல்லிணக்கம் விளையாது!
அடக்குமுறையால் நல்லிணக்கம் விளையாது!

ஆதவன்

அரச அடக்குமுறைக்கரங்கள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் கழுத்தை நெரித்துள்ளன. போரில் உயிர்நீத்த தங்களின் உறவுகளை நினைவுகூர முயன்ற தமிழ் மக்கள் பொலிஸாரால் காட்டு மிராண்டித்தனமான முறையில் அடக்கி ஒடுக்கப் பட்டுள்ளனர். மட்டக்களப்பு, தரவை துயிலும் இல்லத்தில் தமிழ் மக்களின் நினைவேந்தலுக்குத் திட்டமிட்டுத் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. உ யிர்நீத்த தங்கள் உறவுகளை நினைவுகூர்வது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை. இலங்கை என்ற ஜனநாயக நாட்டில் சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்களுக்கு அந்த அடிப்படை உரிமைகூட மறுக்கப்படுகின்றது. நாட்டில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இன நல்லிணக்கம் பற்றி வாய் கிழியப் பேசினாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கிஞ்சித்தும் முயல்வதில்லை. 'தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிவேன், எனக்கு யாரும் பாடம் எடுக்கத்தேவையில்லை' என்று தெனாவட்டுக் கதை கூறும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலும் அதுவே தொடர்கின்றது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வோம் என்று பாடமெடுக்கும் எவரும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான அடக்கு முறைகளை 'உரிமை மீறல்களைக்' கண்டுகொள்வதில்லை. இலங்கையில் நீளும் இந்தப் போக்கே பல தசாப்த காலப் போருக்குக் காரணமானது. பல தசாப்த காலப்போரால் நாட்டின் வளர்ச்சியும், பொருளாதார உயர்ச்சியும் பாதாளத்தில் வீழ்ந்தி ருக்கும் நிலையிலும், கடந்தகாலத் தவறுகளை பெரும்பான்மையினத் தலைவர்கள் இனங்காணவில்லை என்பதையே இப்போது நடக்கும் காட்சிகள் தெளிவாக்குகின்றன. கடந்த காலப்பட்டறிவின்படி, தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் ஒற்றுமைப்பாடம் எடுத்து எதுவும் நடந்துவிடாது என்பதைத் தெற்குத் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும்.

நினைவேந்தல்களுக்கு இடையூறு, திட்டமிட்ட பௌத்த மயமாக்கல், அத்துமீறிய காணிபிடிப்பு என்று தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனநல்லிணக்கம் பற்றிப் பேசிப்பயனில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காகவே பதவிக்கு வந்தேன் என்று நொடிக்கு நூறுதரம் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இன்றி நாட்டை எந்தவகையிலும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லமுடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையானஅக்கறை கொண்டவராக இருந்தால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுக்கவேண்டும்' அவர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான அரச பயங்கரவாதத்தால் ஒரு போதும் நன்மைகள் விளைந்துவிடப்போவதில்லை. தொடர்ச்சியாக அடக்கப்படும் தமிழ்மக்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் நேரம் வரும். கடந்த காலத்திலும் அதுவே நடந்தது. எதிர்காலத்திலும் அது நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரதும் அவா. ஆனால் தற்போதுள்ள காட்சிகள் நாடு மீண்டும் பின்னோக்கிப் பயணிக்கின்றதா? என்ற அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. (ச)

Editorial

416 1

1 Comments

Vignarajah 16-Dec-2023

yes, of course, reconciliation does not come from oppression. at the same time By selling over the country,s resources to foreigners THE ECONOMY WILL NOT GROW.

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.