(ஆதவன்)
13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள, மாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தை நீக்கக்கோரும் திருத்தச் சட்டவரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டிருக்கின்றது. பௌத்த மேலாதிக்கச் சிந்தனையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் பிவிதுறு ஹெல உறுமயக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன் பிலவே இந்தத் திருத்தச்சட்டவரைவை சமர்ப்பித்திருக்கின்றார். உதய கம்மன் பிலவின் திருத்தச் சட்டவரைவு நடைமுறைச் சாத்தியமா என்பதற்கு அப்பால், பௌத்த மேலாதிக்கச் சிந்தனையாளர்கள், நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சிறுநகர்வைக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதையே இந்த முயற்சி வெளிப்படுத்துகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வாக 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சமஷ்டி முறையிலான தீர்வொன்றையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்தத் தீர்வை நோக்கி நகர்வதற்கான முதற்படியாகவே தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதைப் பார்க்கின்றனர். அவ்வாறு இருக்கையில், 13ஆவது திருத்தச்சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்துவதை விரும்பாத பௌத்த மேலாதிக்கச் சிந்தனையாளர்கள் அரசியல் இலாபங்களுக்காகவும் - வாக்கு வைப்பகங்களுக்காகவும் நாட்டில் இனப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதையே விரும்புகின்றனர்.
இறுதிப்போரின் பின்னர் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத்தீர்வு விடயங்களில் காணப்பட்ட கனதி இப்போது தேய்ந்திருக்கின்றது. நாடுகளின் பிராந்திய நலன்களுக்குள் சிக்கி, இலங்கைத்தமிழர் விவகாரம் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அயல்நாடான இந்தியாவும், இலங்கை விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் சர்வதேசநாடுகளும் தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அடக்கியே வாசிக்கின்றன. இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குவதற்குக்கூட பிராந்திய வல்லரசான இந்தியா தயங்குகின்றது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழர் தரப்பிடம் அதைப் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கின்றார். ஆக மொத்தத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் இப்போது கடலில் போடப்பட்ட கல்போன்று அமிழ்ந்திருக்கின்றது.
தெற்கின் மனப்போக்கையும், சர்வதேசத்தின் மன வோட்டத்தையும் கணித்து நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தமிழ் அரசியல் தலைவர்கள், அதிலிருந்து விலகியே இருக்கின்றனர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அவர்களின் முயற்சிகள், நகர்வுகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன என்றே கூறலாம். கட்சி அரசியலிலும், போட்டிகளிலும் கவனத்தைச் செலுத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர் இனப்பிரச்சினையில் சர்வதேச நாடுகளின், பிராந்திய வல்லரசின் கவனத்தை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதில் தோல்வியடைந்துள்ளனர். தமிழர் தரப்பில் உள்ள இந்தப் பலவீனமான நிலைமை, இனப்பிரச்சினைத்தீர்வு என்ற போலி விம்பத்தைக் காட்டிக் காலம் காலமாக ஏமாற்றிவரும் தெற்கை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மாற்றங்களை இனங்கண்டு தமிழ் மக்களின் பிரச்சினையில், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான முயற்சிகளில் சர்வதேசத்தின் - பிராந்திய நாடுகளின் கவனத்தைத்தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டியது தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளினதும் கடமை. இப்போதுள்ள நிலைமை தொடருமானால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பேச்சு அடிபட்டுச் சென்றுவிடும் என்பதே யதார்த்தம். அதை உணர்ந்து தமிழர் தரப்பு இனியாவது சுதாகரித்துக் கொள்ளவேண்டும்.(ஏ)
(23.02.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.