இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!
(புதியவன்)
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி வரும் பாரத தலைமை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இலங்கை வெளிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் இராமேஸ்வரத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மீனவர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சிமடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.