(ஆதவன்)
கொஞ்சக் காலத்துக்கு முன்னர் வரை, அழுத்தம் திருத்தமாகவும் உரத்தும் சொல்லப்பட்டுக்கொண்டிருந்த இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற அக்கிரமங்களுக்கு பொறுப்புக்கூறல் என்ற விவகாரம் மெல்ல அமிழத் தொடங்கியிருக்கின்றது. பௌத்த- சிங்களப் பேரினவாதத்தினது பெருவிருப்பமும் அதுவே. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கள் பேரவையின் 55 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் என்றால் தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தப்படும். தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளாக தம்மை அடையாளப்படுத்துவோரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மைச் சித்திரிப்போரும் ஜெனிவாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்குவர். இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எல்லாம் கிடைத்ததைப்போன்று தமிழ் மக்களைத் திருப்திப்படுத்திவிடுவார்கள் இந்தத் தமிழ்த்தேசிய அரசியல் வாதிகள்.
இறுதிக்கட்டப்போரின் போதான பொறுப்புக் கூறல் விவகாரம் எப்போது ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுப்படுத்தப்பட்டதோ அப்போதே தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையொன்றும், நாடுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமன்றம் அல்ல. வெறுமனே இலங்கைக்கு ஆலோசனையையும் அழுத்தத்தையும் பிரயோகிக்கும் தளம் மாத்திரமே. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையிலுள்ள நாடுகள் தத்தமது பூகோள நலன்களின் அடிப்படையில் மாத்திரம் சில தனிப்பட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைவாக இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள், இராணுவத் தளபதிகளுக்கு சில நாடுகள் தமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்திருக்கின்றன. ஆனால், தமிழ்மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என்பதுடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.
1980ஆம் ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் ஆயுதக் குழுக்களைக் கையாண்டு ஆயுத உதவிகளை வழங்கியதோ, அதேபோன்று மேற்குலகம் இலங்கையைத் தனது காலடியில் கிடக்கச் செய்வதற்காக மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றியது. முன்னாள் ஆட்சியாளர் கோத்தாபயவும் சரி இப்போதைய ஆட்சியாளர்களும் சரி 'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தமாட்டோம், அதிலிருந்து விலகிவிட்டோம் ' என்று சொன்ன பின்னரும் கூட இலங்கையை எந்தவொரு தரப்புகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வதுதான் ஒரேவழி என்ற போதும், அந்த வழிக்கான பாதைகளைத் தேடுவதை விடுத்து அது சாத்தியமில்லை என்பதை தேய்ந்து போன 'ரெக்கோர்டர் போன்று திரும்பத்திரும்பெஒப்புவித்ததைத் தவிர தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்-குறிப்பாக அந்தக் கூட்டுக்குள் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் -ஒன்றும் செய்யவில்லை. ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணையை -சர்வதேச விசாரணை என்று அடையாளப்படுத்தி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று அதிமேதாவித்தனமாக கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனும், அந்தக் கட்சியின் இந்த விவகாரங்களைக் கையாண்ட எம்.ஏ.சுமந்திரனும் கூறினர். சர்வதேச விசாரணை என்றால் என்ன என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு, இலங்கையைப் பொறுப்புக் கூறச் செய்வதற்கு ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை ஒரு தளமல்ல என்பதையும் தெரிந்துகொண்டு அதற்குள் முடக்கச்செய்தனர். இனியாவது அவற்றைப் புரிந்துகொண்டு இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தமிழ்த் தரப்புகள் ஓரணியில் நகர்த்தவேண்டும். (ச)
(24.02.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.