சாந்தனின் சாவுக்குப் பின்னால்....!
சாந்தனின் சாவுக்குப் பின்னால்....!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கைக்கு வருவதை விரும்பாத சக்திகள் யாரென்பது இப்போது அம்பலமாகியிருக்கின்றது. இந்தியாவின் மத்திய பா.ஜ.க. அரசு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை வழங்கியும் தமிழக அரசு-தி.மு.க. -அதை இழுத்தடித்தமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, பெப்ரவரி 22ஆம் திகதி மத்திய அரசின் அனுமதி கிடைத்ததை ஏற்றுக்கொண்டதுடன், ஜனவரி 24ஆம் திகதியிலிருந்து சாந்தனுக்கு நோய்நிலைமை தீவிரமானதால் அவரை அனுப்பமுடியவில்லை என்று சர்வசாதாரணமாகக் கூறியிருக்கின்றார். அவர்களைப் பொறுத்தவரையில் சாந்தனின் உயிரும், அவரது சிறைவாசமும் மிகச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இங்கே 34 ஆண்டுகளாகத் தான்பெற்ற மகனைக் காணாது தவித்த அந்தத் தாயின் ஏக்கம், ஒரு பிடி உணவாவது தன் கையால் ஊட்டிவிடத் துடித்த தாயின் ஆசை இவர்களின் சதியால் நிராசையாகிவிட்டதே.

கருணாநிதி அன்று தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை அவரது மகன் ஸ்டாலினும் இன்றும் தொடர்கின்றார். தமிழக முதலமைச்சராக கருணாநிதி செய்த துரோகத்தை ஈழத்தமிழர்கள் மறக்கமாட்டார்கள். போர் நிறுத்தத்துக்காக உண்ணாவிரத நாடகம், மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதியம்மையாரை அனுமதிக்காமல் திருப்பியனுப்பியமை என்று எதையும் ஈழத்தமிழர்கள் மறக்கவோ -மன்னிக்கவோ மாட்டார்கள். கருணாநிதியின் வாரிசாக முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள ஸ்டாலினும், தன் தந்தைக்கு சற்றும் குறைவில்லாது ஈழத்தமிழர்களுக்கு பெருந்துரோகத்தை அரங்கேற்றியிருக்கின்றார். சாந்தனை விடுவிக்க இந்திய மத்திய அரசு இணங்கியும், தமிழக அரசு அதைச் செயற்படுத்தாமல் நாடகமாடியதை எந்தவகையிலுமே நியாயப்படுத்தமுடியாது.

ஏற்கனவே வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்திருக்கின்றது. தொப்புள்கொடி உறவு என்று சொல்லிக்கொள்வதெல்லாம் உதட்டளவுடனேயே என்கின்ற நிலை உருவாகிவருகின்றது. இப்படியானதொரு சூழலில்தான் சாந்தனின் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் ஈழத்தமிழர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப்போன்று அமைந்திருக்கின்றது.

இந்திய மத்திய அரசு எப்போதும் ஈழத்தமிழர்கள் மீது கரிசனை கொண்டதல்ல என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட இந்திய ஒன்றிய அரசை தூக்கியெறிந்திருந்தார்கள். குமரப்பா - புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுக்குக் காரணமாகியமை, திலீபனின் உணவுத் தவிர்ப்பை உதாசீனப்படுத்தியமை, கிட்டுவை வங்கக் கடலில் வைத்து சிறைப்பிடிக்க முயன்றமை என்று இந்திய மத்திய அரசின் துரோகப்பட்டியல் மிக மிக நீளமானது. இறுதிப் போரில் இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவியமையையும் ஈழத்தமிழர்கள் என்றுமே மறக்கவோ - மன்னிக்கவோ மாட்டார்கள். எல்லா அழிவுகளையும் செய்து விட்டு இன்று அபிவிருத்தி என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்கு கிள்ளித் தெளித்து விட்டால், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தங்களுக்குப் பின்னால் வருவார்கள் என்று இந்திய ஒன்றிய அரசு நினைத்து அதைச் செயற்படுத்துமாக இருந்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை, வரலாற்றிலிருந்து பாரதம் இன்னும் பாடம் கற்கவில்லை என்றும் அது அர்த்தப்படுத்தப்படும். எனவே அபிவிருத்தி மாயைகளால் தமிழர்களை வெல்லமுடியும் எனத் தவறான கணக்கைப்போடுவதை நிறுத்திவிட்டு இந்திய ஒன்றிய அரசாகட்டும், தமிழக அரசாகட்டும் முதலில் ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சிறப்பு முகாம்களில் வலிந்து அடைக்கப்பட்டிருக்கும் ஏனைய மூன்று ஈழத் தமிழர்களையும் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். அவர்களேனும் கொஞ்சம் நிம்மதிக் காற்றைச் சுவாசிக் கட்டும்.

(02.03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#Editorial

281 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.