இன்னமும் மாறாத வன்மம்
இன்னமும் மாறாத வன்மம்

முடக்குவதற்காகப் பின்னப்பட்ட சதிவலையில் தான் நாங்களும் சிக்கவைக்கப்பட்டோம். எஞ்சியிருக்கும் எம் மூவரையும் மீட்டெடுங்கள் என்று சொல்லியிருக்கிறார் திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன். ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களில் அவரும் ஒருவர். சாந்தனைப் போலவே அவரும் இன்னமும் சொந்தநாட்டுக்கோ அல்லது அவர் விரும்பிய வேறுநாட் டுக்கோ செல்லமுடியாமல் சிறப்புமுகாம் என்ற தனிச்சிறைக் குள் வாடிவருகிறார். சாந்தனுக்கு நேர்ந்த கதி தனக்கு வரு முன்னர் உண்மைகளை உலகுக்குச் சொல்லிவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர் மொழிந்த வார்த்தைகள் சாந்த னின் இறுதிப்பயணத்தில், தொலைபேசி வழியே ஒலித்தன. அந்த வார்த்தைகள் இத்தனை நாளும் அவர்கள் பட்ட சிறைவாசத்தின் வலியையும், விடுதலை செய்யப்பட்ட பின்னரும் வெளியுலகோடு தொடர்புகொள்ளமுடியாமல் அடைக்கப்பட்டிருக்கும் அவஸ்தையையும், எங்களையாவது உயிரோடு மீட்டு விடுங்கள் என்ற கெஞ்சலையும் கேட்போரிடத்தே உண்டுபண்ணியிருந்தன.

சாந்தனின் சாவுக்கு இந்தியாவின் மத்திய, தமிழக அரசுகளும், இலங்கை அரசுமே முழுக்காரணம் என்பது வெளிப்படையான விடயம். சாந்தனின் சாவு மூலம் உலக அரங்கில் பறிபோனமானத்தைச் சீராக்கும் சிந்தனை இப்போது கூட இந்திய மத்திய - தமிழக அரசுகளுக்கு வரவில்லை என்பது தான் ஆகப்பெரும் வேதனை. தங்கள் இழுத்தடிப்பாலும், திட்டமிட்ட பழிவாங்கலாலும் ஓர் உயிர் பறிபோய்விட்டதே என்ற குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், சிறப்பு முகாமில் எஞ்சியிருக்கும் றொபேர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் பழையபாணியிலேயே இந்தியாவின் மத்திய - மாநில அரசுகள் கையாள்கின்றன. இந்திய மத்திய அரசு என்னதான் உலக அரங்கில் தன்னை யொரு வல்லரசாக நிலைநிறுத்த முயன்றாலும், இலங்கைக்கு முன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடும் விநோதம் இன்னமும் தொடரவே செய்கின்றது. அத்தோடு என்ன தான் ராஜீவ்காந்தி, தனது பரமவைரியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரென்றாலும் கூட, தங்கள் நாட்டின் பிரதம ராக இருந்தவரை எப்படி ஒரு போராளிக்குழு கொன்று விட்டு, உயிரோடு வெளியேற முடியும் என்ற வன்மம் பா.ஜ.க. அரசாங்கத்திடம் இருக்கவேசெய்யும். எனவே இந்திய மத்திய அரசாங்கம், சாந்தனைச் சாகடிக்கவே முயற்சிக்கும் என்பதும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழக அரசும் இந்த நயவஞ்சகச் சதியில் கூட்டாளி யாகக் கைகோர்க்கும் என்பதைத்தான் தமிழ்மக்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருக்கிறது.

இதற்கு முன்னரும் - கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் - தி.மு.க.வின் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எத்தனையோ துரோகங்கள் தமிழகத்தில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கருணாநிதி என்ற ஒற்றைமனிதரின் தனிப்பட்ட குரோதத்தின், அரசியலின் வெளிப்பாடாகவே ஈழத்தமிழர்கள் எண்ணினர். ஆனால் அப்பன் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்வதைப் போல, தந்தைசெய்த துரோகத்தை விட, இப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன் தமிழ்த் தேசிய எதிர்ப்பை, சிறைப்பறவைகள் மீது காட்டுகின்றார். மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கிய பெப்ரவரி 22 ஆம் திகதியே சாந்தனை விடுவித்திருந்தால், தாயைக் கண்ட மகிழ்வி லேயே சாந்தனின் நோயெல்லாம் பறந்திருக்கவும் கூடும். ஆனால் இந்திய மத்திய அரசெனும் சாமி வரங்கொடுத்தும் தமிழக அரசெனும் பூசாரிகள் செய்த காரியத்தால் சாந்தனின் உயிர் பறிபோய்விட்டது.

'இதெல்லாம் சட்டம் சார்ந்த விடயங்கள். உடனடியாக எதனையும் செய்யமுடியாது' என்று சிலவேளை தமிழக அரசுக்கு யாரும் வக்காலத்து வாங்கக்கூடும். அத்துமீறி மீன் பிடித்து, இலங்கைச் சட்டத்தின்படி சிறைக்குள் தள்ளப் பட்ட மீனவர்களை விடுவிக்க, அந்தச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யுமளவுக்கு இராஜதந்திர அழுத்தங்களை வழங்கக்கூடிய இந்தியாவால் - தமிழக அரசால், தங்கள் நாட்டில் இருக்கும் ஒரு ஜீவனை சட்டப்படி விரைவாக விடுவிப்பதென்பது அவ்வளவு கடினமான காரியமல்லவே. குற்ற உணர்ச்சியாலோ அல்லது இன்னமும் வன்மம் மனதுக்குள் குடிகொண் டிருப்பதாலோ என்னவோ சாந்தன் சாவடைந்த பின்னர் ஒருவரியில்கூட தமிழக அரசின் சார்பிலோ, தி.மு.க. சார் பிலோ அஞ்சலிச் செய்திகூட விடவில்லை. சாந்தனைக் கொன்றது இந்திய மத்திய - தமிழக அரசுகளே என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று தேவை?

(06.03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#Editorial

312 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.