வெடுக்குநாறிமலையில் சிவவழிபாடுகள் இடம்பெறக்கூடாது என்பதில் தீர்க்கமாக நின்று, ஆதிலிங்கேஸ்வரரை வழிபடவந்த பக்தர்களை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு வதைத்து அக்கிரமங்கள் புரிந்து அனுப்பிவைத்திருக்கின்றது ஸ்ரீலங்கா அரசின் பொலிஸ் படை. வெடுக்குநாறிமலையில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற காட்சிகள் எல்லாம், குறைந்தபட்ச ஜனநாயக அம்சங்கள் கொண்ட எந்தவொரு நாட்டிலும் காணக்கிடைக்காத துர்ச்சம்பவங்கள் -கொடுமைகள் - வன்செயல்கள் மற்றும் ஜனநாயகப் படுகொலைகள்.
நவீன உலகில் ‘போர்களின் பூமி' என்று அறியப்படுவது பலஸ்தீனம். பள்ளிக்குழந்தைகள் பேனா பிடிப்பதற்குப் பதிலாக, கவண்களில் கற்களை வைத்து வீசுவதற்குத்தான் அங்கு பழக்கப்படுகின்றனர். கோலி யாத்தை எதிர்த்த தாவீதாக இஸ்ரேல் இராணுவத்தின் அடக்குமுறைகளையும் அதன் யூத சித்தாந்தச் சிந்தனைகளையும் அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். 1940களில் பரந்து விரிந்திருந்த பலஸ்தீனம் இன்று குறுகிக் குறுகி அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் அடை யாளப்படுத்தப்படுகின்றது. இந்த அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்பு மனோநிலைகளும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதும், மனித உரிமைகளைத் துச்சமெனக் கருதிய கைதுகளும்தான் 'போர் மலிந்த பூமியாக' இன்று பலஸ்தீனத்தை மாற்றியிருக்கின்றது. இனியும் பொறுத்துவிடமுடியாது என்ற கட்டத்தில், பலஸ்தீனர்களும், அவர்களின் ஆதரவு பெற்ற ஹமாஸ் போராளிகளும் மிகமோசமான வகையில் இப்போ தெல்லாம் எதிர்வினையாற்றுகின்றனர். மத்திய கிழக்கில் பலஸ்தீனம் எவ்வாறோ அவ்வாறுதான் ஆசியாவில் இலங்கை.
தமிழர் தாயகத்தில் தொல்லியல் பகுதிகளாக இன்று அடையாளப்படுத்தப்பட்டவற்றில் 90 சத வீதத்துக்கும் அதிகமானவை தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதிகள். ஆனால், இந்தப் பாரம்பரியத்தை தொல்லியலை - தொன்மைமிகு வரலாற்றை திரித்து, அழித்து, புனைந்து அதைச்சிங்கள-பௌத்தத்துக்குரியதாக மாற்றிவிடவேண்டும் என்பதில் 'பௌத்த பேரினவாதம்' காலம்காலமாகவே தீவிரம் கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெடுக்குநாறிமலையில் இருந்த சிவலிங்கமும் இதர தெய்வங்களின் உருவச்சிலைகளும் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு உடைத்துச் சிதி லப்படுத்தப்பட்டமையும், நேற்றுமுன்தினம் சிவராத்திரி வழிபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிருகத்தன நடவடிக்கைகளும் அதையே தான் கட்டியம் செய்கின்றன.
இலங்கையும் இனவாதமும் இரண்டறக் கலந்தவை. அவை எக்காலமும் ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்கப்பட முடியாதவை என்ற செய்தியைத்தான் 'பொருளாதாரப் பேரிடரின் பின்னரான’ இந்த அதி யுச்ச மதத் தாண்டவம் பட்டவர்த்தனமாக்குகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறான மத அக்கிரமங்கள் சிங்கள-பௌத்த பேரினவாத அரசுக்கு அவசியமா கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தன் இயல்பான அமைதி நிலையை தமிழர்தாயகம் இழக்கவேண்டும் என்பதுதான் பேரினவாதப் பூதத்தின் பெருவிருப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமநேரத்தில், இவ்வாறானதொரு அக்கிரமம் நிகழ்கின்றதென்றால் இதன் பின்னாலுள்ள அசாத்தியத் துணிவை இந்த அரச படைகளுக்குக் கொடுத்தது யார்? என்ற கேள்வி இங்கெழுவதும் தவிர்க்கப்பட முடியாததாகின்றது. பலஸ்தீனத்துக்காகக் குரல்கொடுக்கும் உலகின் மிகச்சொற்பமான நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதற்காக இலங்கைத் தலைவர்களுக்கு பலஸ்தீனம் விருதுகள்கூட வழங்கியிருக்கின்றது. ஆக, பலஸ்தீனத்தில் யூதர்களின் ஆக்கிரமிப்பை, அத்துமீறலைப் புரிந்து தெளிந்து அதற்காகக் குரல்கொடுக்கும் சிறிலங்கா, தான் என்ன மனோநிலையில் தமிழர்கள் விவகாரத்தையும்தமிழர்களுக்குரிய தொன்மைத் தேசங்களையும் கையாள்கின்றது என்பது புரியாமல் இருப்பதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சம்தான்.
(10.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.