சிற்பி என்று அறியப்படும் லீகுவான் யூ, சீனாவை 'உலகின் தொழிற்சாலையாக மாற்றிய, பொருளாதாரப் புரட்சியாளர் டெங் ஷியாபிங் ஆகியோருக்குள்ள மனவலிமை இலங்கை அரச தலைவர் ரணிலுக்கு உள்ளது என்று புகழாரம் சூட்டியிருக்கின்றார் பெரமுனவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எஸ்.பி.திஸாநாயக்க பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் போது பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கும். ஐந்து இலட்சம் மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியே சீனத்தை டெங் ஷியாபிங் எழுச்சியுறச் செய்தார். ரணிலும் போராட்டங்களை இரும்புக் கரங்களைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றார் என்றும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
ஒரு தலைவனின் ஆளுமை, அவர் மக்கள் போராட்டத்தை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்துகின்றார் என்பதில் வெளிப்படும் ஒன்றல்ல. போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு ரணிலின் பலத்தையும் -திறமையையும் மதிப்பிடும் எஸ்.பி., முதலில் ஒரு விடயத்தைத் தெட்டத்தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூரிலும், சீனாவிலும் பொருளாதார மறுமலர்ச்சிகள் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், அந்தந்த நாடுகளில் திளைத்திருந்த ஊழல் மோசடிகள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.
போதைப்பொருளுக்கு எதிரான மிகப்பெரிய 'படையெடுப்பை' பாராபட்சம் இல்லாமல் மேற்கொண்டது சிங்கப்பூர். கம்யூனிசக் கொள்கைகளுக்கு அமைய ஊழல் பேர்வழிகளின் சொத்துகளை அடியோடு பறித்தெடுத்து, அவற்றை மக்கள் மயப்படுத்தியே சீனா தன் மறுமலர்ச்சிப் பயணத்தை ஆரம்பித்தது. இன்று சீனத்தில் ஓடும் பலநூறு கப்பல்கள் கறுப்புப் பணமாக முன்னொரு காலத்தில் பதுக்கப்பட்டிருந்த சொத்துகள் தான். ஆதலால், இன்னொரு டெங் ஷியாபிங் போன்றோ, மா சேதுங் போன்றோ அல்லது லீகுவான் யூ போன்றோ ரணில் தன்னைத் தரமுயர்த்திக்கொள்ள வேண்டுமாயின், முதலில் இந்தத் தீவில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஊழல் பேர் வழிகளுக்கு அழுத்தம் திருத்தமான முடிவுரையை எழுதியே ஆகவேண்டும். ஊழலாலும் மோசடியாலும் கறுப்புப் பணத்தாலும் பில்லியன் கணக்கான டொலரை இலங்கை இழந்துள்ளது. அப்பாவி இலங்கையர்களின் பணம் இருக்குமிடம் தெரியாதிருக்கையில் சர்வதேசநாணய நிதியத்திடம் வாங்கிக்குவிக்கும் கடன்களால் எவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடையும்? இது எவ்வாறு பொருளாதாரச் சீர்திருத்தமாகும்? இதை மேற்கொள்ளும் ஒருவர் எவ்வாறு பொருளாதாரச் சீர்திருத்தவாதியாவார்?
பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு 'உலகின் தொழிற்சாலையாக' சீனாவை டெங் ஷியாபிங் மாற்ற முற்பட்டபோது அவர் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கையாக கடல்சார் பொருளாதாரப் பாதுகாப்பே இருந்தது. கப்பல் காவுகைக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக புதிதுபுதிதாக கப்பல்களை உருவாக்கினார், துறைமுகங்களை ஏற்படுத்தினார், தற்சார்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார், தொழிற்சாலைகளை உருவாக்கினார். 1978ஆம் ஆண்டில் டெங் ஷியாபிங் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு 1.8 வீதமாக இருந்தது. 2017ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு 18.2 வீதமாக உயர்ந்து விட்டது. கடந்த 40 வருடத்தில் முப்பது மடங்கால் சீனாவில் வர்த்தகச் சுழற்சி அதிகரித்திருக்கின்றது. 1978ஆம் ஆண்டு வருடம் முழுவதும் மேற்கொண்ட பொருளாதார ஈட்டுகையை தற்போது இரண்டே நாள்களில் செய்கின்றது சீனம். உள்நாட்டு உற்பத்தியையும், போதைக்கு முற்றுப்புள்ளியையும், தற்சார்புப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தாமலும் எந்தவொரு நாட்டுக்கும் இது சாத்தியமேயில்லை.
உண்மையில் ரணிலும் ஒரு டெங் ஷியாபிங் என்றால் முதலில் அவர் கை வைக்க வேண்டியது ஊழலிலும் கறுப்புப் பணத்திலும் தான். அதை அவரால் செய்ய முடியுமா? அவ்வாறு செயற்படுவாராயின் ரணில் ஒரு மாபெரும் தலைவராக இலங்கையர்களின் வரலாற்றில் எழுதப்படுவார். ஆனால், அவர் ஆட்சியில் தொடர்வாரா? என்பதற்குரிய பதில், ரணிலுக்கும் தெரியும்; எஸ்.பி.க்கும் தெரியும்.
(13.03.2024 - உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.