ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடத்த 3.ஆம்திகதி வெலிமடை புதிய நீதிமன்றக் கட்டட தொகுதியை திறந்து வைந்து உரையாற்றியிருந்தார். அவர் தனது உரை உலகின் ஆழமாக விசனித்திருந்தார். 'மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இலங்கை மற்றும் காஸா பகுதி தொடர்பில் இந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுகிறது? தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்குப் பதிலளிக்க வேண்டுமா?' என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
மேற்குலக நாடுகள் எப்போதும் இரட்டை அணுகுமுறைக் கொள்கையையே இலங்கை விடயத்தில் கைக்கொள்கின்றன. தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்காக அவர்கள் குரல் எழுப்பவில்லை மாறாக தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தமிழர் விவகாரங்களை மேற்கின் ஆட்சியாளர்கள் கையாள்கின்றார்கள். இதனால் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிட்டவும் போவதில்லை, மேற்குநாடுகள் அந்த நீதி யைப் பெற்றுக்கொடுக்கவும் விடமாட்டார்கள் என்பதைத் தமிழ்த் தரப்புகள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் கடுமையாக விசனிக்கின்றார். இவ்வாறான இரட்டைநிலைப்பாட்டுப் போக்குக்கு இலங்கை பதிலளிக்கவேண்டுமா என்று மக்களிடம் கேள்வியை முன்வைக்கின்றார். ஜனாதிபதி யின் கேள்வி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இலங்கை என்ற இந்தச் சிறிய தீவில் தமிழ் மக்கள் என்ற ஓர் இனக் குழுமமும் வாழ்ந்து வருகின்றது. அந்த இனக்குழுமத்தின் மீது எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகிய சிங்கள பௌத்தர்களும் அந்தச் சித்தாந்தத்தின்படி ஒழுகும் இலங்கை ஆட்சியாளர்களும் எப்படி நடந்து கொண்டார் கள்? எப்படி நடந்துகொள்கின்றார்கள் என்பதை ஜனாதிபதி சுயபரிசோதனை செய்துகொண்டாரா? இந்தச் சிறிய தீவில் தமிழ் மக்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகள், நடைமுறைப் பிரயோகத்தின்போதான இரட்டை நிலைப்பாடுகள் தொடர்பில் பட்டியல்படுத்தினால் அது அனுமார் வால்போல நீண்டு சென்றுகொண்டேயிருக் கும் என்பதால், ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை மாத்திரம் இங்கு முன்வைக்கலாம்.
மட்டக்களப்பு, மயிலத்தமடுவில் சிங்களவர்கள் அத்து மீறி குடியேறியிருக்கின்றார்கள். அவர்களை வெளியேற் றச் சொல்லி தமிழர்கள் அறவழியில் போராடுகின்றார் கள். அதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தை அறவழியில் நடத்தினார்கள். போராட்டம் நடத்தி முடித்து திரும்பும் வழியில் அவர்களை சிறிலங்கா பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் பிணை வழங்கியும் வெளியே வரமுடியாதவாறு சிறையில் ஒருநாள் பொலிஸார் அடைத்துவிட் டனர். ஆனால், அதே இடத்தில், அம்பிட்டிய சுமண தேரர் பல டசின் கணக்கானோருடன் போக்குவரத்துக்குடையூறு விளைவித்து பொலிஸாரை நோக்கி அசிங்கமான சொற்களை வீசி போராட்டம் நடத்துகின்றார். அடாத்தாகப் புத்தர் சிலை வைக்கின்றார். போதாக்குறைக்கு தமிழர்களை வெட்டுவேன், கொல்லுவேன் என்கிறார். சிறிலங்கா பொலிஸார் அந்த அடாவடிப் பிக்குவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
இப்படி ஆயிரமாயிரம் பாகுபாடுகளை, எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் நித்தமும் அனுபவித்துக் கொண்டிருகின்றார்கள். சிங்கள - பௌத்த சித்தாந்தத்தில் ஒழுகும் இலங்கையின் அரச திணைக்களங்கள் ஒவ்வொன்றாலும் பாகுபாடுகள் காட்டப்படுகின்றனதான். உலகின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பும் ஜனாதிபதி ரணில், தனது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை முதலில் பார்க்கட்டும். உங்களைத் திருத்துங்கள்... உலகம் தானாகத் திருந்தும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.