அரசுகளை நம்புவதால் பயனில்லை!
அரசுகளை நம்புவதால் பயனில்லை!

இலங்கைக் கடற்பரப்பில் எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களுக்கு 6 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, மீண்டும் தாயகம் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோடு பிடிபட்ட இன்னொரு மீனவர் 24 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர்தான் இந்தியாவுக்குச் செல்லமுடியும். குறித்த 22 பேரும் ஒரே குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நிலையில் இந்த ஒரு மீனவர் மட்டும் ஏன் சிறைவாசம் அனுபவித்த பின்னர் வீடு செல்லவேண்டும்? அங்கேதான் இருக்கிறது விடயம். குறித்த சிறைவாச மீனவர் இதற்கு முன்னரும் இதேபோன்று சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார். நல்லமாட்டுக்கு ஒரு சூடு.ஏற்கனவே தண்டனை பெற்ற அந்த மீனவர் இலங்கைக் கடலை எட்டியும் பார்த்திருக்கக்கூடாது. ஆனால் அவரோ சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட காலப் பகுதிக்குள் மீண்டும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார். விளைவு? தன் சகாக்கள் நாடு சென்ற போதும் இவர் மட்டும் 24 மாதங்கள் இலங்கைச் சிறைக்கம்பிகளை எண்ண வேண்டியதுதான்.

இந்தச் சம்பவம் ஒரு விடயத்தை மிகத் துலாம்பரமாக்குகின்றது. இந்திய மீனவர்களுக்கு என்னதான் தண்டனை வழங்கினாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் அத்துமீறத்தான் போகிறார்கள் என்பதே அது. ஆனால் இங்கே பிடிபடுகின்ற மீனவர்கள் வெறும் கருவிகள் மாத்திரமே. அவர்களைப் பின்னின்று இயக்குவது பெரும் பணமுதலைகள். அவர்கள் தான் ஆழ்கடல்லில் இருக்கும் ட்றோலர் அத்தனை வளங்களையும் வாரியெடுக்கும் களை வாங்கிக் கொடுத்து, அதில் போய் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்குமாறு கூலிக்கு வேலை செய் யும் மீனவர்களைப் பணிக்கிறார்கள். அவர்களும் தங்கள் குடும்பத்தின் நிலை காரணமாக வேறுவழியின்றி நம் கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள். கடல்வளத்தை அள்ளுகிறார்கள். இலங்கை மீனவர்களின் வலைகளை அறுக்கிறார்கள். சிலவேளை கடற்படையிடம் பிடிபடுகின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் படகு நிறைய மீனோடு சென்றுவிடுகிறார்கள். ஒருவகையில் அவர்களின் குடும்பநிலை காரணமாகத்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று பார்த்தாலும், மறுபுறத்தில் இந்த அத்துமீறிய மீன்பிடியால் வடக்கு மீனவர்கள் கடற் றொழிலையே கைவிட வேண்டிய நிலையை இந்திய மீனவர்கள் உண்டாக்கியுள்ளனர். இன்னொரு குடும்பத் தின் வாழ்வாதாரத்தை அழித்து தங்கள் குடும்பத்தை வளம்படுத்துவது மனச்சாட்சியே இல்லாத செயலென்று இந்தியமீனவர்களுக்கு ஏன் புரியவில்லை?

ஒருபக்கம் இந்திய மீனவர்களின் அத்துமீறல், இன்னொரு புறம் சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளால் அழிவுறும் கரையோரக் கடல் வளம், மறுபுறம் எல்லையோரக் கடற்பகுதிகளில் உள்நுழைந்து அட்டூழியம் செய்யும் சிங்களமீனவர்கள் என்று மும்முனை 'மூதேவிகளால்' வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இந்த மும்முனைப் பிரச் சினை குறித்து எத்தனையோ தடவை வடக்கு மீனவர்கள் போராடிப் போராடிக்களைத்துவிட்டார்கள். எவ்வளவுநாள் தான் அவர்களும் போராடிக் கொண்டிருக்க முடியும்? உண்மையில் இருநாட்டு அரசுகளும் மனம் வைத்தால் இந்தப் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடியும் ஆனால் அவை அதை ஒருபோதும் விரும்பாது. மீனவர்களை மோதவிட்டு, அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே இலங்கை - இந்திய அரசுகள் விரும்புகின்றன. எனவே இந்த அரசுகளிடம் வடக்குத் தமிழ் மீனவர்கள் தீர்வை எதிர்பார்த்தால் இலவு காத்த கிளிகளாக ஏமாறவேண்டியதுதான். ஒரு மீனவரின் பிரச்சினை இன்னொரு மீனவருக்குத்தான் நன்கு தெரியும். எனவே அரசுகளையோ, அமைச்சர்க ளையோ நம்புவதை விடுத்து, இந்திய - இலங்கை மீனவர் சங்கங்கள் தமக்கிடையே பேச்சை நடத்தி, ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும்.

434 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.