எழிலன்
மீட்பர்கள் பற்றிய ஏக்கங்களும், கனவுகளும் அடக்கி ஒடுக்கப்படும் எல்லோரிடத்தும் இயல்பாகவே எழும். வரலாற்றின் அநேக பக்கங்கள் இந்த ஏக்கங்களால்தான் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மீட்பர்கள் வருவதில்லை. 'எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்' எனச் சொன்ன கிருஷ்ண பரமாத்மாகூட யுகக்காத்திருப்புக்குப் பின்னரே தன்னுடைய அவதாரங்களை நிகழ்த்தினார். ஆனால், அந்த அவதாரங்கள் எல்லாமே, மக்களின் துயர் துடைப்பையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அத்தோடு அந்தப் பிறப்பெடுப்புகள் நடந்த தருணமும் ஆபத்துகளால் சூழப்பட்டிருந்தது. கம்சன் என்ற கொடூரமான மன்னனின் கழுகுப்பார்வைக்கு நடுவே சிறைக்கூடத்தில் தான் கிருஷ்ணன் அவதரித்தான். சுற்றிலும் ஆயுதங்களோடு காவலர்கள். வெளியே செல்லத் தடை. எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட வாசுதேவரும், தேவகியும் அடைக்கப்பட்ட குறுகலான இடத்தில்தான் மீட்பரான கண்ணனின் கால் தடம் பதிந்தது. அந்த யுகம் கண்ணனுக்கானது. அதனால் காலம் அவனைக் காப்பாற்றியது. அவன் மக்களைக் காப்பாற்றினான். அவ்வாறு இருளடர்ந்த காலத்தில் கண்ணன் பிறந்தாலும், அவனது அவதரிப்பின் பின்னர் ஒளி பிறந்தது. அதனால் கண்ணனின் பிறந்ததினத்தை இப்போதும் கிருஷ்ணஜெயந்தி என இந்துக்கள் கொண்டாடி மகிழத் தவறுவதில்லை.
இந்து மதத்தில் மட்டும்தான் மீட்பர்கள் பிறப்பெடுத்தார்களென்றில்லை. கிறிஸ்தவ மக்களின் மீட்பரான இயேசு கிறிஸ்துவும் கண்ணனைப் போலவே, ஆபத்துகள் நிறைந்த தருணத்தில் தான் பிறப்பெடுத்தார். கண்ணனுக்கு கம்சனைப் போல, இயேசுவுக்கு ஏரோது மன்னன். 'யூதர்களின் ராஜா' பிறப்பெடுக்கப் போகிறார் என்ற அச்சத்தில் அவன் நாட்டில் உள்ள அத்தனை சிசுக்களையும் கொன்றொழித்தான். அப்படியிருந்தும் தப்பிப் பிழைத்து, மாட்டுத் தொழுவத்தில் தஞ்சமடைந்த யோசேப்-மரியாள் தம்பதியருக்கு, இராப்பொழுதில் வானில் வழிகாட்டி நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்க இயேசு அவதரித்தார். அவரது அவதரிப்பை வானில் தோன்றிய நட்சத்திரங்கள் மூலம் கண்டறிந்த ஞானிகள் சிலர், அந்த நட்சத்திரங்களை வழிகாட்டியாகக் கொண்டு குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ந்தனர் என கிறிஸ்தவ மதம்
கூறுகின்றது. அதன் பின்னர் இயேசு மக்களின் மீட்பராக மாறினார், தான் நேசித்த மக்களுக்காகவே தன்னுயிரை ஈந்தார். ஆனாலும் இயேசு மீண்டும் உயிர்த்தார் என்று கிறிஸ்தவ மக்கள் நம்புகின்றனர். அவரது சாவு பற்றியும், உயிர்த்தெழல் பற்றியும் இன்னும் மர்ம முடிச்சுகள் இருக்கவே செய்கின்றன. தன் மக்களுக்காகவே வாழ்ந்த இயேசுவின் பிறப்பை மீட்புத் திருநாளாக, கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகமக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
நாமும் நமக்கோர் மீட்பரைப் பெற்றிருந்தோம். யுகங்கள் பல தவமிருந்தாலும் கிடைத்தற்கரிய மீட்பர் அவர். எல்லா மீட்பர்களையும் போலவே அவரது பிறப்பும் ஒரு மாரிகாலப் பொழுதில், அடக்குமுறைகள் உச்சமடைந்த தருணத்தில் தான் நிகழ்ந்தது. மற்றைய மீட்பர்களுக்கு வந்த ஆபத்துகளைப்போலவே இவருக்கும் ஆபத்தே வாழ்க்கையானது. அந்த மீட்பர்களை எப்படிக் காலம் காப்பாற்றியதோ அப்படியே இவரையும் காப்பாற்றியது. தன்னலத்தை விடுத்து, தன் சிந்தனை, சொல், செயல் என எல்லாவற்றையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தார். அவர் பிறப்பின் பின்னர் நமது இனம் தலை நிமிர்ந்தது. சங்ககாலம் திரும்ப, புதிய புறநானூறை அவர் படைக்கத் தொடங்கினார். முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழினத்தின் தலைமகனாக வழிநடத்தினார். உலகமே வியந்து பார்க்குமளவுக்கு போரியல் நுட்பங்களை உருவாக்கினார். தொலைந்துபோன தமிழினத்தின் உரிமையையும், நிலத்தையும், மகிழ்வையும், வாழ்வையும் மீட்டெடுத்தார். அந்த மீட்பருக்கு இன்று வயது 69. எம்மினத்துக்கு இன்றுதான் கிருஷ்ணஜெயந்தி, கிறிஸ்மஸ் எல்லாமே. யுகபுருஷர்களின் வருகை எல்லா இனத்துக்கும் கிடைப்பதில்லை. நம்மினத்துக்கு காலம் அப்படி ஒரு மீட்பரைக் கொடுத்திருந்ததை எண்ணி கொண்டாடித் தீர்ப்போம். (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.