பெண் பணியாளர் கைது!
ஆதவன்.
கல்முனை இஸ்லாமபாத் பெண்கள் சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணியைக்களவு எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் அடி காயங்களால் உயிரிழந்துள்ளான்.
நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் அந்தக் காப்பகத்தில் சிறுவன் பாதுகாப்புக்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவிலைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் (வயது - 15)என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது மருத்துவமனைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உட்காயங்களால் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாகவும் உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் சிறுவனைத் தாக்கியதாக சந்தேகத்தில் 25 வயது மதிக்கத்தக்க மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினம் இரவு உணவை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது எனத் தெரியவில்லை எனவும் முன்னுக்குப் பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.