[ஆதவன்]
வடக்கு மக்களிடையே நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. யாழ். சிவில் சமூக நிலையத் தின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்தும் நபரொருவர் ஜனாதிபதியைச் சந்தித்து வடக்கில் சாதியப் பிரச்சினைகள் உள்ளன என்றும் இந்தச் சாதியப்பாகுபாட்டால் பலர் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய நிலையிலேயே, சாதியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற் கொள்ளவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் சாதியப்பாகுபாடுகள் இல்லை என்று சொல்லுவதற்கில்லை. இருக்கவே செய்கின்றன. வடக்கில் மட்டுமல்ல இது உலகளாவிய பொதுப் பிரச்சினை உலகளாவிய பொதுப்பிரச்சினை என்று குறிப்பிடுவதன் பொருள் இது தீர்க்கப்படாதிருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக வடக்கைக் குறிப்பிட்டுப் பேசுபொருளாக்கும் அளவுக்கு இது இப்போது வலிதான விவகாரமாக இல்லை என்பதே.
சாதியம் என்பது இருமுனைக் கத்தி. அந்தக் கத்தியை ஒரு குழந்தையின் கைகளில் கொடுப்பது எவ்வளவு
ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது சாதியம் தொடர்பான பேசுபொருள்களை பொருத்தமற்ற
தருணங்களில் ஆரம்பிப்பது. யாழ்ப்பாணத்திலும் சரி அல்லது வடக்கு மாகாணத்திலும் சரி கடந்த 30
வருடங்களுக்கு முன்பிருந்த சாதிய ஒடுக்குமுறை நிலைமை இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள்,
யுவதிகள் பலர் சாதியப் பாகுபாட்டைத் தூக்கி தொலைதூரம் எறிந்துவிட்டுப் பயணப்பட ஆரம்பித்துவிட்டனர். வருவாயில் ஏற்பட்ட சமநிலைத்தன்மை, 'கற்றறிந்த சமூகம்' என்ற கோடு காட்டல் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை மையப்படுத்தியதாக இல்லாமல் விரிவாக்கம் அடை கின்றமை, உலகமயமாதலால் உண்டான மாற்றங்கள், புலம்பெயர் பயணங்கள் என்பனவும் சாதியம் சிதைக்கப்படவும், வர்க்க வேறுபாடுகள் களையப்படவும் இன்று காரணமாக இருக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு தசாப்தத்தில் சாதியம் என்பது பேசுவதற்கு அரிய விடயமாக அல்லது பேசுபொருள் இல்லாத விடயமாக மாறிவிடும். ஆக, சாதியம் என்பது அதனைத் தூக்கி வைத்துப் பேசாமல் விடுவதனூடாக மெல்லமெல்ல சமாதி கட்டிவிடக்கூடியதொன்றே. இவ்வாறான சாதக மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரு ஜனாதிபதியிடம் அதைக் குறிப்பிட்டுக் கூறி கவனமீர்ப்பது என்பது திரை மறைவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மிகப்பெரும் சூழ்ச்சியின் வெளிப்பாடே.
ஓர் அரசியல் நகர்வு அல்லது திட்டம் வெற்றிபெற வேண்டுமாயின், பிரித்தாளும் தந்திரம் தவிர்க்கப்பட முடியாத காலமாக இக்காலம் அமைந்திருக்கின்றது. ஆதலால் தமிழினத்தை சாதியாலும், சமயத்தாலும் பிரித்து- தமிழர்களை நலிவடையச் செய்வது, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பேரினவாதப் பூதத்தின் பெருவிருப்பு. அந்தப் பெருவிருப்பத்தை கன கச்சிதமாக இம்மியும் பிசகாமல் நிறைவேற்றிக் கொடுக்கத்தான், பேரினவாதத்துக்கு வாலாட்டும் சில விஷச்செடிகள் முழுவீச்சில் செயற்பட்டுக் கொண் டிருக்கின்றன. உண்மையில் நெருஞ்சி முள்ளாக இப்போது தைக்கும் பிரச்சினை சாதியமல்ல, இதுபோன்று தமிழினத்தின் உரிமைப் பிரச்சினையை சாதியப் பிரச்சினையாக மடைமாற்றுவது பிரகிருதி களே. அந்தப் பிரகிருதிகளை, விஷச்செடிகளை இனங்கண்டு, களைந்து, தமிழர்களாக ஒன்றிணைந்து தேசியத்தைப் பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவை. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.