இறுகப்பற்றுதல்
இறுகப்பற்றுதல்

[ஆதவன்]

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் 'அயலகத் தமிழர்கள் விழா முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனவரி 11, 12ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த விழாவில் கனடா, பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் பலநூறு தமிழர்களும் தமிழ்த் தலைவர்களும் கலந்துகொண்டனர். உண்மையில் காலத்தின் தேவைகருதிய இந்த முயற்சி அதற்குரிய கனதியைப் பெற்றதா? அதிர்வலைகளை இலங்கையில் ஏற்படுத்தியா? என்று கேட்டால் அதற்கு 'இல்லை' என்பதே பதில். இலங்கையிலிருந்தும் சில தலைவர்கள், அரசியல் வாதிகள் கலந்துகொண்டாலும் மக்கள் மத்தியில் இந்த விழா பேசுபொருளாகவில்லை. அதுவே யதார்த்தம்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறுபட்ட அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் ஆட்சியமைத்த காலம் முதல் இன்றுவரை அவருடைய பல நகர்வுகள் மிகக் காத்திரமானவையாகவும், தமிழர்களை ஓரணியில் ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் அமைந்திருக்கின்றன என்றால் அதில் மாற்றுக்கருத்தில்லை. 2009ஆம் ஆண்டின் பின்னர் அதாவது விடு தலைப் புலிகள் ஆயுத அளவில் மெளனிக்கச் செய்யப் பட்டதன் பின்னர் தமிழக - ஈழ அரசியல் உறவென்பது அவ்வளவு ஆழம் மிக்கதாகவும் நேர்த்தியாகவும் இருக்க வில்லை. அந்த உறவானது வெறும் அறிக்கைகளை மையப்படுத்தியதாக, காகிதரீதியிலானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த சபிக்கப்பட்ட போக்குக்கு, ஒரு காத்திரமான முற்றுப்புள்ளி வைத்து - ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நீண்டதும் நெடியதுமான உறவில் - ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலினின் அரசியல்போக்கு நகர்ந்து செல்வது தனித்துத் தெரிகின்றது.

ஆட்சியேறிய பின்னர் ஸ்டாலின் தனது புதிய அமைச்சரவையில், இதுவரைகாலமும் இருந்துவந்த 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன்' என்ற துறையை மாற்றி "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்' என புதிய துறையை உருவாக்கியிருந்தார். இந்த மாற்றம் ஈழத்தமிழர் நலனை மையப்படுத்தியதுதான் என்பதில் சந்தேகக்கண் தேவையில்லை. அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் அகதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவர்களுக்கான இதர நலத்திட்டங்கள் என்பனவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஸ்டாலின் எவ்வளவு அக்கறையுடனும் ஈடு பாட்டுடனும் இருக்கின்றார் என்பதைத்தான் மெய்ப்பிதம் செய்தன - செய்கின்றன. தி.மு.க.வின் ஈழத்தமிழர் உறவு வரலாற்றில் 2009ஆம் ஆண்டுப் பக்கங்களை நீக்கி விட்டு ஆராய்வோமாயின், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சி, 1991ஆம் ஆண்டு ஜனவரியில் கலைக்கப்பட்டதன் பின்னணியில் தி.மு.க.வின் ஈழப் போராட்ட ஆதரவே காணப்படுகிறது. ஆதலால் தி.மு.க. மீது அவ்வளவு கசப்புணர்வையோ பகைமையையோ வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவை இங்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கிரு அங்கிருப்பது தமிழக அரசு. தி.மு.க.,அ.தி.மு.க. என்ற பேச்சையே நாம் 'இராஜதந்திர' ரீதியாகத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இப்படியானதொரு புரிதலின் அடிப்படையில், 'அயலகத் தமிழர்களுக்கான' இந்த விழாவைத் தமிழர் தாயகத்தில் இன்னும் பேசுபொருளாக்கி அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய தேவையும் பொறுப்புணர்வும் தமிழ்த் தலைவர்களுக்கு இருக்கவே செய்கின்றது. இவ்வாறானதொரு விழா இடம் பெற்றதுகூடத் தெரியாமல், இலட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கின்றனர். தமிழகத்துடனான தொன்றுதொட்ட உறவை மேலும் பலப்படுத்த வரலாறு வழங்கியுள்ள வாய்ப்பையும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தப் பற்றுதல்தான் தமிழ்த் தேசியத்தின் பிடிமானம். (ச)

Editorial

491 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.