ஒளியும் இருளும் இணைந்தாற் போல்! 
ஒளியும் இருளும் இணைந்தாற் போல்! 

(ஆதவன்)

இலங்கைக்கும் மாலைதீவுகளுக்கும் இடையில் நோயாளர் காவு வானூர்தி சேவைகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு வானூர்தி சேவைகள் போக்குவரத்து அமைச்சருக்கும் இலங்கை வானூர்தி சேவைகள் அமைச்சருக்கும் இடையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகளின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், இந்த விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவப் பேருதவி தொடர்பானதாகவோ அல்லது வானூர்தி பறப்புடன் தொடர்புடையதாகவோ இருக்கலாம். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த ஒப்பந்தத்தின் பின்னுள்ள ஆபத்தம் சங்களும் அதே நேரம் 'இலங்கை ஒரு அணிசேரா நாடு' என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வரும் அரச தலைவர் ரணிலின் இராஜதந்திர வெற்றியும் அப்பட்டமாகப் புலப்படும்.

மாலைதீவின் அரச தலைவராக மொகமட்மொய்சு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவர் சீனாவின் தீவிர ஆதரவாளர். சீனாவின் ஆதரவாளராக மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்ப்பாளராகவும் அவர் பல இடங்களில் தன்னைப் பதிவு செய்து வருகின்றார். பிராந்தியத்தில் இந்தியாவைப் பலமிழக்கச் செய்யும் சீனாவின் கரங்களைப் பலப்படுத்துவது மொய்சுவின் பிரதான நடவடிக்கையாக அமைந்துள்ளது. இதனால் மாலைதீவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியிருக்கின்றது. மாலைதீவும் இந்தியாவில் தங்கியிருந்த விடயங்களில் மாற்று நிலைப்பாடுகளை விரைவாக எடுத்து வருகின்றது. இதுவரை நோயாளர் காவு வானூர்தி சேவைகளை இந்தியாவே மாலைதீவுக்கு வழங்கி வந்தது. ஆதலால், இனிவரும் காலத்தைக் கருத்திற் கொண்டு அந்தச் சேவையிலிருந்து இந்தியாவைத் தவிர்த்து விட்டு இலங்கையை நாடியிருக்கின்றது மாலைதீவு.

இலங்கைக்கு தென்மேற்காக அமைவு பெற்றிருக்கும் மாலைதீவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் சம நேரத்தில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இலங்கைக்கு வந்து விடலாம். சீனாவுக்குச் செல்ல வேண்டுமாயின் அது தொலைதூரப் பயணம். இந்தச் செயல் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் செயலாகவே அமையும். ஆதலால் கேந்திர முக்கியத்துவம் கருதிய இந்த ஒப்பந்தத்தைத் தனது வாய்ப்பாகவும் இலங்கை இறுகப்பற்றியிருக்கின்றது. இந்த இருதரப்பு ஒப்பந்தத்தால் இலங்கை மீது இந்தியா கோபம் கொள்ளுமே? என்ற தார்மீகச் சந்தேகம் எழலாம். ஆனால், இலங்கையின் குறிப்பாக ரணிலின் 'அணிசேராக் கொள்கையை' இந்தியா நம்புகின்றது என்பதை இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, 'சுற்றுலாவுக்குச் செல்லும் இந்தியர்கள் இலங்கைக்குச் செல்வதைத் தங்கள் முதன்மைத் தெரிவாகக் கொண்டிருக்க வேண்டும்' என்று இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அறிவுறுத்தியுள்ளார்.

ஆக, பிராந்தியத்திலும் சரி சர்வதேசத்திலும் சரி இலங்கை ஓர் அணிசேரா நாடு என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகக் கூட இதைக் கொள்ளலாம். 'அங்கீகரித்தல்' 'ஏற்றுக்கொள்ளல்' இவையிரண்டும் மிக மிக முக்கியமான விடயங்கள். ரணிலின் ராஜதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அவருக்கு இருக்கும் சர்வதேசப் பிணைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தனத்தையும் இந்தியா மாலைதீவுகள்-சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அண்மைக்கால மோதல்கள் காலக்கண்ணாடியாக உணர்த்தியிருக்கின்றன.

இங்கு துயரமான விடயம் என்னவென்றால், இப்படிப்பட்ட அரசியல் சதிராட்டங்களைக் கடந்து ரணிலின் ராஜதந்திர நகர்வுக்கு அப்பாற்பட்டு, எவ்வாறு தனக்குரிய நீதியை ஈழத்தமிழினம் வென்றெடுக்கும் என்பதே.

பிராந்தியத்தில் இலங்கை இன்று கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத்தனம், ஈழத்தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் ஓர் இருட்டுப்பாதை செல்லும் வழியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏதேனும் வெளிச்சங்கள் ஏற்பட்டாலேயே எமக்கான நீதி இங்கு சாத்தியம்.

(02.02.2024 உதயன் பத்திரிகை)

401 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.