(ஆதவன்)
கெஹலிய ரம்புக்வெல ஒருமாதிரியாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகினார் என்பதை விடவும் அவர் விலக நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதே உண்மை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க, கறையற்ற கைகளையுடையவர் என்று தன்னை இந்தத் தருணத்தில் நிரூபிக்காவிட்டால், வரவிருக்கும் அரசத்லைவர் தேர்தலில் அம்போவாகிவிடவே அமோக சந்தர்ப்பமுண்டு. அந்தளவுக்கு கெஹலிய மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன. இனியும் அவரைக் காப்பாற்ற நினைத்தால், அவரோடு சேர்ந்து ரணிலின் அரசியல் வாழ்வும் மூழ்கவேண்டியதுதான். அதனாலேயே தனக்கு முட்டுக்கொடுக்கும் மொட்டுக்கட்சி கோபித்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு, கெஹலியவைக் கைது செய்யவும், பதவியில் இருந்து தூக்கவும் ரணில் காய்களை நகர்த்தியிருந்தார்.
இலங்கையின் அரசியலில் நரியான ரணிலுக்கே சிக்கலைக் கொடுக்குமளவுக்கு கெஹலிய அப்படி என்னதான் செய்துவிட்டார் என்று சாதாரணக் கேள்வி யோடு கடந்துவிட முடியாது. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ப என்பதைப் தப் போலவேதான் கெஹலியவும் நடந்துகொண்டார்.நாடு மிக இக்கட்டான பொருளாதார பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது, மீண்டுவர உதவியவை வெளிநாட்டுக் கடன்களே. குறிப்பாக இந்தியா வழங்கிய கடனுதவிகளே இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னை ஆசுவாசப்படுத்துவதற்கும், சுகாதாரப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் பேருதவியாக அமைந்தன. இப்படிப் பிச்சையாகக் கிடைத்த பணத்தைக் கூட, தன் பொக்கற்றுக்குள் போட முயன்றிருக்கிறார் ரம்புக்வெல, செயற்கையாக மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்கி, 'அவசரமாக மருந்துகளைக் கொள்வனவு செய்யாவிட்டால் பெரும் நெருக்கடி தோன்றும்' என ரணிலையும், அமைச்சரவையையும் நம்ப வைத்து, மருந்துக்கொள்வனவுக்கான நடைமுறைகளுக்கு மாறாக தரமற்ற மருந்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் கெஹலிய ரம்புக்வெல. இந்த மருந்துக் கொள்வனவு மூலம் சுமார் 150 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கெஹலியவின் பணத்தாசையின் விளைவை இந்த நாட்டில் உள்ள சாதாரணகுடிமக்கள் மிக மோசமான முறையில் எதிர்கொள்ள நேர்ந்தது. மர்மச்சாவுகள் அதிகரித்தன. குறிப்பாக சிறுவர்களும், கர்ப்பிணிகளும் தரமற்ற மருந்துப் பாவனை காரணமாக அதிகளவில் உயிரிழக்க நேரிட்டது. அந்தச் சாவுகளுக்கெல்லாம் தரமற்ற மருந்தே காரணம் என்று சொல்லப்பட்டபோதும், அதை அரசாங்கமும், அமைச்சர் கெஹலியவும் அடியோடு மறுத்தனர். 'மருத்துவமனைக்கு வரும் எல்லோருமே குணமடைவதில்லை. நோய் வந்தால் சாவு வருவது சகஜம்தான்' என்று திமிர்த்தனத்தோடு இந்தக் குற்றச்சாட்டைக் கடந்திருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய. அதன்பின்னரும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. மக்களின் நலனை விடவும் தம் சகாவைக் காப்பாற்றுவதே முதன்மையானது என்ற நோக்கில் ரணிலும், மொட்டுக் கட்சியும் செயற்பட்டதால், அப்போதைக்கு கெஹலியவின் தலைதப்பியிருந்தது. எனினும் அவரிடமிருந்த சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, சுற்றாடல்துறை அமைச்சு கொடுக்கப்பட்டது. ஆனாலும் விதி வலியதே. மிகநீண்ட போராட் டத்தின் பின்னா இப்போது கெஹலியவின் ஊழல்கள் ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டதால், வேறுவழியின்றியே அவரைக் கைதுசெய்யும் முடிவை ரணில் அரசாங்கம் எடுத்தது. இப்போதும் அவரைக் காப்பாற்ற நினைத்திருந்தால், ரணில்அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுவதை மறப்பதே நல்ல முடிவாக இருந்திருகுக்கும். இப்போதோ கெஹலியகைது செய்யப்பட்டதை வைத்து 'ஊழல் செய்த எனது அமைச்சரைக் கூட கைது செய்தேன்' என்று ரணில் மார்தட்டி வாக்குக் கேட்கும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. ஆனால் கெஹலியவின் பாவத்தில் ரணிலுக்கும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. பாவத்தின் சம்பளத்தை ரணிலுக்கும் காலம் வழங்கியே தீரும்.
(07.02.2024 உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.