(ஆதவன்)
உலக வரலாற்றில் முதன்முறையாக பொதுத்தேர்தல் ஒன்றில், ஒரு சுயேச்சைக்குழு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வாரிச் சுருட்டியிக்கின்றது. புரட்சிகரச் சிந்தனையும் முற்போக்குத்தனமும் ஒருமித்ததாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றம் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நிகழ்ந்துவிடவில்லை. ஆகப்பெரும் பழமை வாத நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் தற்போது சிறையிடப்பட்டிருக்கின்றார். 150க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர்மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. தேசத்தின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை, ஊழல் மோசடிகள் என நீளும் இந்த வழக்குகளில், முடிவடைந்த 35 வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் பிரதமர் ஒருவர் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் மீது, புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசால் குறுகிய காலத்துக்குள் இவ்வளவு வழக்குகள் குவிக்கப்படுகின்றன என்றால் அந்த வழக்குகளின் நம்பகத்தன்மை என்னவாக இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல. அதை பாகிஸ்தான் மக்கள் நன்றாகவே நாடி பிடித்து அறிந்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் தேர்தல் முடிவுகள்.
தேர்தலுக்கு சில காலங்களுக்கு முன்னர் இம்ரான் கானுக்கும் அவருடைய தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைகள் விதிக்கப்பட்டபோது தேர்தலுக்கு வெறும் மூன்று மாதங்களே மீதமாக இருந்தன. இதையடுத்து சுயேச்சைக் குழுக்களாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் களமிறங்கினார்கள் புதிய பெயர், புதிய கட்சி. பாகிஸ்தானின் பழம்பெரும் கட்சிகளான ஷெரிப், பூட்டோகுடும்பங்களின் முஸ்லிம் லீக் மற்றும் மக்கள் கட்சி என்பனவற்றை வீழ்த்தி மொத்தமுள்ள 266 தொகுதிகளில் 101 தொகுதிகளை வாரிச்சுருட்ட இந்தச்சுயேச்சைகளுக்கு வெறும் இரண்டரை மாதங்களே போதுமாக இருந்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் ஷெரிப்பின் 'முஸ்லிம் லீக் நவாஸ்' கட்சியை விட 25 வீதமான தொகுதிகளையும், பிலாவல் பூட்டோவின் 'பாகிஸ்தான் மக்கள்' கட்சியை விட 45 வீதமான தொகுதிகளையும் முகவரியற்றுக் களமிறங்கிய அந்தச் சுயேச்சைக்குழு அதிகம் வென்றிருப்பது எத்தனை பெரிய சாதனை. இங்கேதான், பாகிஸ்தானியர்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் பட்டவர்த்தனமாக மெய்ப்பிதமாகின்றது. முஸ்லிம்கள் என்ற 'இனக்குழும அடையாளத்தாலும்' பழமைவாதக் கருத்துகளாலும் தாம் பல தசாப்தங்களாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்ற புரிதலை மக்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் (சுயேச்சையினர்) முன்வைத்த 'பிராந்திய அமைதி, சகோதரத்துவம், தனிமனித பொருளாதார வளர்ச்சி' என்பனவற்றின் கனதியை மக்கள் உணர்வதற்கு இரண்டரை மாதங்கள் போதுமாயிருந்திருக்கின்றது.
இலங்கையிலும் இனிவரும் ஆண்டுகள் தேர்தல் காலங்கள்தான். 'இனக்குழுமம்' என்ற அடையாளத்தை மையப்படுத்திய பிற்போக்குத்தனத்துடன்கூடிய பழமைவாதக் கருத்துக்கள் தற்போதிருந்தே பரப்பப்பட ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இனங்கள் மீது சேறுபூசி. இனப்பதற்றத்தை ஏற்படுத்தி அதிகாரக் கதிரைகளை அலங்கரிக்கும் கபடத்தனம் இலங்கை அரசியலுக்குப் புதிதல்ல. ஆனால் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்பட்ட மாற்றம் இலங்கையர்களின் மனங்களிலும் ஏற்படுமா? இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பனவற்றைத் தூக்கி யெறிந்துவிட்டு பரஸ்பர மரியாதையுடன்-சுதந்திரத்துடன் -தனிநபர் பொருளாதாரத்தை முன்னிறுத்தக்கூடிய வகை யிலான ஆட்சியை இலங்கையர்கள் ஏற்படுத்துவார்களா? என்பன இன்னும் விடைதெரியாக் கேள்விகளே. காலம் என்பது ஒரு பேராசான். வாழ்வெனும் பயணத்தில் அது சமநேரக் கற்பிதங்களையும் வழங்கியே செல்கின்றது. இலங்கையைப்போன்று 'திவாலான' நிலையில் இருந்த பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டிருக்கும் தேர்தல் மாற்றங்கள்கூட ஒரு வரலாற்றுச் செய்திதான். (ச)
(13.02.2024 உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.