சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடிமுடிவு!
சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடிமுடிவு!

புதியவன்.

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 27ஆம் திகதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை காலமானார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருக்கும்போதே இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, சாந்தன் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இறுதியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கியது. அவர் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் சாந்தனை இலங்கை அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்றும் மத்திய அரசிடம் வினா எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பிலோ, கடந்த ஜனவரி 22ஆம் திகதியே இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நீதிபதிகள், "மத்திய அரசு ஜனவரி 22ஆம் திகதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை" என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், "ஜனவரி 24ஆம்திகதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நடக்கக்கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை" என்று விளக்கமளித்தார் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழக அரசின் விளக்கத்துக்கு பின் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது. மேலும் எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதிஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். (ச)

154 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.