3 பேர் மிச்சமிருக்கிறோம்; எங்களையும் கைவிடாதீர்!
3 பேர் மிச்சமிருக்கிறோம்; எங்களையும் கைவிடாதீர்!

சிறைக்குள் இருந்தவாறு பயஸ் உருக்கமான கடிதம்

ஆதவன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடு ' விக்கப்பட்டபோதிலும், சிறை வாழ்வைவிடவும் மோசமானதும் கொடுமையானதுமான வாழ்வையே தற்போது அனுபவித்து வருகின்றோம். சாவை எதிர்நோக்கியவாறே இன்று எம் வாழ்வு அமைந்திருக்கின்றது என்று சிறைக்குள் இருந்து கடிதம் எழுதியுள்ளார் ரொபேர்ட் பயஸ்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு இலங்கையரான அவர், சாந்தனின் மறைவையடுத்து தம் வலிகளை வெளிப்படுத்தி மிக உணர்வு பூர்வமாக இந்தக் கடிதத்தை வரைந்துள்ளார் .

அந்தக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது:-
உங்களை உங்களோடு ஒருவனாக, சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்தக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இப்படிச் சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்த மளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டகைக்குப்பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறு பேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபே ரில் நான், ஜெயக்குமார், முருகன் மற் றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளிவிவகாரத்துறை நாட்டை விட்டு வெளியேற்றும் வரை சிறப்பு முகாமில் அடைத்துவைக்க உத்தரவிட்டது.

சிறையை விடவும் கொடுமையான வாழ்வு
தொலைந்துபோன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தறுவாயில்கூட விடுதலையைருசிக்க முடியாமல், சிறிது நேரம்கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும், வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமுக்குக் கொண்டுவந்து அடைக்கப்பட்டோம். 'இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந் தேறியது அப்பட்டமான சிறை மாறுதல்தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக் குப் போகப்போகத்தான் விளங்கியது. நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய திகதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். 'சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்' என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாக மும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர் களை பலி வாங்கியிருக்கின்றன. கடந்த ஜனவரி 28ஆம் திகதி ஒரு வாரகாலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் உடல்நிலை மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துகொள்வது..?

தினம்தினம் வஞ்சிப்பு
சிறையில்கூட சிறை நிர்வாகத்துக்குச் சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு உரிமைகள், கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்புமுகாமோ சிறையை விட கொடுமையானது. இங்கு எந்தச் சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்னநினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச்சிறை. நாங்கள் சிறுசிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும்கூட போராடி, உயிரைக் கொடுத்துப்பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்குப் பின்னும் எங்களை, எங்கள் குடும்பங்களோடு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரி மையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும். உணவு தவிர்ப்புப் போராட்டங் களையும் மேற்கொண்டே பெற்று வரு கின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலேபோகும். மீதி கேட்கப்படாமலே மக்கிப்போகும்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டபோது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாள்களைக் கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப்பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிருவருடங்களாவது இருந்திருப்பார்.

முதுமையின் பிடியில், கடைசியாக ஒரு முறையாவது தனது மகனைப் பார்த்து விடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன் மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்தத்தாய்க்கு, தன் மகனுக்கு கடைசியாக வாய்க்கரிசி கொடுக்கத்தான்வாய்த்திருக்கிறது. இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான். என்ற எதிர்பார்த்து காத்திருந்த அந்தத்தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்ல முடியும்?அத்தகைய கல்நெஞ்சம்படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன?!  33 வருடங்கள் கழித்துதன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாகக் காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்தச் செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

எம் கதியென்ன?
இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவப் பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாகத் தங்கள் குடும்பங்களைப் பிரிந்துவாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்து கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்துவிடமாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்த்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்குத் திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனைப் பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப்பஞ்சுபாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களைக் காணிக்கையாக்கிவிட
மாட்டேனா..?! அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களைப் பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசிக் காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்சக் காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்துவிட்டுப்போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..? எங்கள் குடும்பங்களைப் பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்குவருமா..? - என்றுள்ளது. (ச)

#IndiaNews

143 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.