இருப்பதை விடவும் இல்லாதிருப்பது மேல்!
இருப்பதை விடவும் இல்லாதிருப்பது மேல்!

(ஆதவன்)

13 ஆவது திருத்தத்திலுள்ள - ஆனால் நடைமுறைப்படுத்தப்படாத - பொலிஸ் அதிகாரத்தை இல்லாமல் ஆக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனி நபர் சட்டவரைவொன்றைச் சமர் பித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில், அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்போவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கையில் இனித் தேர்தல்காலம். அரச தலைவர் தேர்தலா? பொதுத்தேர்தலா? என்ற கேள்விகள் இருந்தாலும், தேர்தல்கள் விரைவில் நடக்கப்போகின்றன என்பது மாத்திரமே உண்மை. தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளும் தேவை என்பதால், அதையொட்டி அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும் தென்னிலங்கையில் எழும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கடந்த காலங்களைப்போன்று சிங்களத் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் என்னத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோரும், சிங்கள அரசியல் தலைவர்களுடன் உடன்பாட்டை ஏற்படுத்திவிட்டு இறுதியில் அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்ற ஒப்பாரியைத் தவிர்ப்பதாயின் இம்முறையாவது அவர்களும் சிந்திக்கவேண்டும்.

13ஆவது திருத்தம் மாத்திரமல்ல -ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு ஏற்பாட்டின் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக்காண முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை தமிழ்த் தலைவர்கள் மக்கள் முன்வெளிப்படுத்த வேண்டும். 37 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாத ஒரு விடயத்துக்காக இன்னமும் குரல் கொடுப்பது புத்திசாலித்தனமன்று. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது. அதனாலேயே, சிங்களத் தலைவர்கள் தங்களுக்கு விரும்பிய நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும், ஆளுநர்கள் ஊடாக மாகாணசபைகளை முடக்குவதும், மாகாணசபையின் அதிகாரங்களைப் பறிப்பது என்றும் திருகுதாளங்களை முன்னெடுக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பாக கையெழுத்திட்ட இந்தியா, இவை எது தொடர்பிலும் அலட்டிக் கொள்ளாமலேயே இருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் தமது பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கம் குந்தகம் ஏற்படுத்தாவிட்டால் போதும். ஏனெனில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரம் 37ஆண்டுகளாக நடைமுறையாகாதபோதும் அதைப்பற்றி எந்தச் சிரத்தையும் இந்தியா எடுக்கவேயில்லை.

13 ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கொள்வோம் எனக் கூறும் தமிழ்த் தலைவர்களும், 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கான வரப்பிரசாதம் எனச் சொல்லும் தமிழ் அரசியல் தலைவர்களும் ஒவ்வொரு திருத்தச் சட்டங்களின் ஊடாக 13 ஆவது திருத்தத்தின் அதிகாரங்கள் மீளப்பறிக்கப்படுவதைப் பார்த்தாவது திருந்தமாட்டார்களா? ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆல் தமிழருக்கு எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணரமாட்டார்களா? இருப்பதை விடுத்து இல்லாததற்கு ஆசைப்படக்கூடாது என்று அரசியல் வகுப்புகளை எடுக்கும் புத்திஜீவிகள், இருக்கும் 13ஆம் திருத்தத்தால்கூட எதுவுமில்லை என்ற உண்மையை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்?

13 ஆவது திருத்தம் இன்று முழுமையாக நடைமுறையானாலும், நாளையே இன்னொரு கம்மன்பிலவோ அல்லது அவரது வாரிசோ வந்து, அந்தத் திருத்தத்தை இல்லாதொழிக்கும் வகையில் தனிநபர் சட்ட வரைவைக் கொண்டு வரலாம். எப்போது அறுந்து விழும் என்று தெரியாது தொங்கிக்கொண்டிருக்கும் இப்படியானதொரு 13ஆவது திருத்தம் இருப்பதை விட இல்லா திருப்பதே மேல். (ஏ)

(07.03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

296 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.