காடொன்றுக்குள் வழிதவறி நுழைந்த மனிதனொருவனை, பசியோடிருந்த சிங்கம் பார்த்துவிட்டது. அந்தச் சிங்கம் துரத்த, அவன் ஓடத் தொடங்கினான். திடீரென மலைச்சரிவொன்றில் தவறி விழுந்தவன் ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொண்டு தொங்கத் தொடங்கினான். அவனது கெட்டகாலம் அந்த மரத்தில் ஒரு விஷப்பாம்பு அவனை நோக்கி வரத்தொடங்கியது. மலையுச்சியில் சிங்கம் இவன் மேலே வரட்டுமெனக் காத்திருந்தது. கீழே பார்த்தான். சலசலக்கும் ஆற்றில் இவனை விழுங்க முதலைகள் காத்திருந்தன. எந்தப் பக்கம் திரும்பினாலும், அவனது உயிரைக் கொல்லும் ஆபத்துகள் ஆபத்துகள் சூழ்ந்திருந்த தருணத்தில், அந்த மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து தேன்துளிகள் இவன் வாயில் விழுந்தன. எல்லா ஆபத்துகளையும் மறந்து போன அந்த மனிதன் தேனைச் சுவைக்கத் தொடங்கினான்.
இப்படி சிங்கம், பாம்பு, முதலை என்று ஆபத்துகள் கூட்டணி சேர்ந்து தாக்கினாலும், அதைப்பற்றியே கவலைப்படாமல் தேனை ருசி பார்க்கும் அந்த மனிதன் கட்டாயம் இலங்கையைச் சேர்ந்தவனாகவே இருக்கமுடியும். ஏனெனில் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள், விலைவாசி உயர்வு, உள்ளூர் உற்பத்தி வீழ்ச்சி, மூளைசாலிகள் மற்றும் தொழிலாளர் படையின் வெளியேற்றம், போரால் உண்டான பாதிப்புகளின் விளைவுகள், இனவாத மற்றும் மதவாதப் பிரச்சினைகள் என நான்கு பக்கமும் நீருக்குப் பதிலாகப் பிரச்சினைகளால் சூழப்பட்ட இலங்கைத்தீவு மக்களில் வெறும் 14 வீதமானோரே மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனராம். அதனால் உலகிலேயே நல்ல மனோநிலையோடு இருக்கும் மக்களைக் கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. உண்மையில் இதுவோர் உலக ஆச்சரியமே. இவ்வளவு பிரச்சினைகளும் வேறொரு நாட்டில் நிகழ்ந்திருக்குமானால், அந்த நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டோர் மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியக்காரர்களாகவே மாறியிருப்பர். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா, அதனால் இவன் ரொம்ப நல்லவன்டா' என்ற வடிவேலு பட வசனம் போல, இதைவிட நரகமே மேலானது என்ற நிலை வந்தாலும் கூட இலங்கை மக்கள் மனநலம் கெடாமல் உறுதியோடு இருப்பதை ஒரு மருத்துவ அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும்.
இப்படி எதையும் தாங்கும் இதயங்களாக இலங்கை மக்கள் இருப்பதற்கும், மனநலனில் சிறந்தவர்களாக உலகிலேயே இரண்டாமிடத்தைப் பெறுவதற்கும் மிகமுக்கியமான காரணம், கடந்த காலங்களில் பட்ட வலிதான். இலங்கையின் வரலாறு எப்போதுமே ஒரு சீரான நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கவில்லை. தொடர்ச்சியான படையெடுப்புகள், குழிபறித்தல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், அந்நிய தேசத்தவர்களின் அடக்குமுறைகள், ஆட்சியாளர்களின் கொடுங்கோல் நிர்வகிப்புகள், இயற்கைச் சீற்றங்கள், பெருந்தொற்றுகள், உள்நாட்டுப் போர், இன, மதவாத மோதல்கள், வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இரையாதல் என்று ஓய்வில்லாமல் இலங்கை மக்கள் அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரோடு வாழ்தலே நிரந்தரமாகியிருந்தது. இப்படி ஒவ்வொரு வலியும், மக்களின் மனங்களை மரக்கச்செய்துவிட்டது. அதன் விளைவாக இப்போது என்னதான் துன்பம் நேர்ந்தாலும் அதன் போதெல்லாம் இன்பம் சேர்க்கயாழெடுப்பது போல, கவலைகளை மறந்துவிட்டு நடக்கவேண்டிய வேலைகளில் மட்டுமே மனதைலயிக்கச் செய்கிறார்கள். அதனால்தான் மனக்குழப்பங்களுக்கு ஆளாகாமல், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் பற்றற்ற நிலை இலங்கையர்களுக்கு வாய்த்திருக்கிறது. இப்படி மன நலம் சிறப்பாக இருப்பதற்கு கடந்தகாலங்களில் எம்மை வதைத்த ஆட்சியாளர்களுக்குத்தான் இலங்கை மக்கள் நன்றி சொல்லவேண்டும்.
(12.03.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.