வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் பக்கச் சார்பாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். அந்தத் திணைக்களத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை தொடர்ந்தும் இழக்கப்பட்டு வருகின்றது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயச் சம்பவத்தை, தனியே ஒரு கோயில் விவகாரமாகப்பார்க்க முடியவில்லை. மாறாக சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கங்களின் சிந்தனைப் போக்கை செயலுருப்படுத்தும் அதன் திணைக்களங்களின் அதிகாரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற கோணத்தில்தான் தமிழ்மக்கள் பார்க்க வேண்டியுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு எதிராகவும் தொல்பொருள் சின்னங்களைச் சேதப்படுத்தியதாக வழக்குத் தாக்கலாகியுள்ளது. அது சோடிக்கப்பட்ட வழக்கு என்று தமிழ் அரசியல்வாதிகள் பலரும் சொல்கின்றனர். அது சோடிக்கப்பட்ட வழக்குத்தான் என்பதும் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 'தொல்லியல் பிரதேசத்தில் பகல் நேரத்தில் சாதாரணமாக நடத்தப்படும் வழிபாட்டுப் பூசைகளுக்கு மேலதிகமாக விசேட பூசைகள் நடத்துவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த 6ஆம் திகதி தொல்பொருள் பதில் பணிப்பாளரால் வட மாகாண மூத்த பொலிஸ்மா அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே கடந்த 8ஆம் திகதி சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொல்லியல் பிரதேசத்தில் பணியில் அமர்த்தப்பட்ட ஆயினும், தொல்லியல் பிரதேசத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து சாதாரணமாக பூசை வழிபாடுகள் செய்தனர். இரவு நேரத்தில் தொல்லியல் பிரதேசத்தில் பூசகர்கள் மற்றும் 40 பேரை கொண்ட குழுக்களால் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தொல்பொருள் திணைக்களம் அல்லது வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாகம் செய்து விசேட சிவராத்திரி பூசைகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவுக் கடமை யிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறு செய்யவேண்டாம் எனத் தெரிவித்தபோதிலும் அவர்கள் அதனையும் மீறித் தொடர்ந்து செயற்பட்டதுடன், நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வனப் பிரதேசத்தினுள்யாக பூசைகள் நடத்துவதன் ஊடாக தீ ஏற்பட்டு, அழிவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால் வனப்பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசித்தமை மற்றும் சட்ட முரணான வகையில் ஒன்று கூடிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனும் குற்றத்தின் கீழ் பிரதான பூசகருடன் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் வவுனியா நீதிமன்றில் நேற்றுமுன்தினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொல்லியல் சின்னங்களைச் சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டே பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொலிஸ் ஊடக அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டைவிட புதிய குற்றச்சாட்டு புகுத்தப்பட்டுள்ளது. அதுவும் இலகுவில் பிணையில் வெளியில் வரமுடியாத குற்றச்சாட்டு செருகப்பட்டுள்ளது.
இதேவெடுக்குநாறிமலைஆலயத்தில் விக்கிரகங்கள் அடித்து நொருக்கப்பட்டபோது தொல்லியலுக்கு ஏற்படாத சேதம் இப்போது அமைதியாக வழிபாடு நடத்திய போதுதான் ஏற்பட்டதா? ஆலய நிர்வாகத்தால் அடுப்பு எரிக்கப்பட்ட பிரதேசத்தைத்தாண்டி வனப் பிரதேசத்தில் தீ மூட்டப் பட்டமைக்கான அடையாளம் காணப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்திருந்தனர். இது ஆலய நிர்வாகத்தை வழக்கில் சிக்க வைப்பதற்கான சதிமுயற்சி என்ற கோணத்தில் அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். மக்கள் சந்தேகப்பட்டது சரிதான் என்பதையே இப்போது நடக்கும் காரியங்களும், பொலிஸாரின் புதிய குற்றச்சாட்டுகளும் நிரூபித்து நிற்கின்றன. ஓர் இனத்துக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கும் இத்தகைய குரோதங்களும், திட்டமிடப்பட்டு புனையப்பட்ட குற்றச்சாட்டுகளும், கைதுகளும் நாட்டில் மீண்டும் ஒரு குருதிச் சகதிக்கே வழி வகுக்கும்.
(14.03.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.