பாலியலுக்கு ஒரு கல்விமுறை
பாலியலுக்கு ஒரு கல்விமுறை

வடக்கில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்புணர்வுகளில் அநேகமானவை சிறுமிகளின் சம்மதத்துடன்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கின்றது. 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியை அவரின் சம்மதத்துடன் புணர்ந்தாலும் அது வன்புணர்வுதான். பாரதூரமான குற்றம் தான். அது, சட்டத்தின் இரும்புக் கரங்களால் அணுகப் படவேண்டிய விடயமே. ஆனால், இந்தச் செய்தி வெளிப்படுத்தியிருக்கும் தகவல் மிகக் கனதியானதும் ஆபத்தானதுமாகும். பாலியல் தொடர்பான குறைந்த பட்சப்புரிதலும் தெளிவும்-அறிவும் அற்றவர்களாகவே வடக்கின் சிறுவர், சிறுமிகள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர் என்ற விடயத்தைத்தான் மேற்படி செய்தி கட்டியம் செய்திருக்கின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வுக் கல்வியை வழங்கும் 'செயற்பாட்டு நடவடிக்கைகளில்' இறங்கவுள்ளதாக அரசாங்கம் கடந்த வருடம் அறிவித்திருந்தது. சுகாதார அமைச்சு கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதி நிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்நடத்தைத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் நபர்களை குழுவாக ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகளை நிறுவனமயப்படுத்தி முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அப்படியெனில் இந்தத் திட்டத்தின் செல்நெறியையும், தோல்வியையும்தான், மேற்படி தகவல்கள் கட்டியம் செய்கின்றன. பாலியல் துஷ்பிரயோகங்களும், துர்நடத்தைகளும், கலாசார சீரழிவுகளும் மலிந்த பூமியாக தமிழர் தாயகப்பரப்பு தற்போது மாறிக் கொண்டிருக்கின்றது. சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களற்ற ஒரு முழுநாளைக் காண்பதே இப்போது குதிரைக்கொம்பு நிலைதான். பதின்மத்தைத் தொடாத பாலகர்கள் கூட பாலியல் இச்சைக்கு இரையாக்கப்படும் பின்னணியில், பாலியல் தொடர்பான அறிவூட்டலை பாடசாலைக் கல்வியூடாக எம் குழந்தைகளுக்கு வழங்கவேண்டியது தற்காலத்தில் தவிர்க்கமுடியாத தாகும். ஐரோப்பிய நாடுகளிலும். அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வளர் நாடுகளிலும் இந்தக் கல்வி என்றோ செயலுருப் பெற்றுள்ளது. தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் பாலியல் விழிப்புணர்வுக் கல்வியில் அண்மைக்காலமாக முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இலங்கையோ நவநாகரிகக் கல்வித் திட்டத்தில் தொலைதூரத்தில் உருண்டு புரண்டுகொண்டிருக்கின்றது.

ஒரு குழந்தை அதன் ஐந்து வயது வரைக்கும், பெற்றோரினதும் உற்றோரினதும் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும்தான் கூடுதலான நேரங்களைச் செலவிடுகின்றது. பாடசாலைக்காகப் புறப்பட்ட பின்னர் மூன்றாம் தரப்பு நபர்களுடனான பழக்கத்தை உருவாக்கவேண்டிய கட்டாயமும் தவிர்க்கமுடியாத் தனமும் அந்தக் குழந்தைக்கு ஏற்படுகின்றது. இதனால் பள்ளிப்பருவத்தின் ஆரம்ப நாள்களிலேயே அந்தக் குழந்தைக்கு நல்ல தொடுகை தொடர்பிலும் தவறான தொடுகை தொடர்பிலும் முடியுமான வரையிலான தெளிவூட்டல்களை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் கடமையாகும். அதற்காக, இதுவரை இந்த விழிப் புணர்வு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றோ அல்லது சிந்தனை வறட்சி மிக்கதாக இருந்தன என்றோ பொருளல்ல. பேச்சு வழக்கில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களுக்கும், பாடசாலைக் கற்றல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. இந்த இரண்டாம்நிலை நடவடிக்கைகள் மிக இலகுவாக மாணவர்களைச் சென்றடையவல்லவை. அவற்றைச் செய்ய உரியவர்கள் மனம் வைப்பார்களா?

(28. 03.2024-உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

301 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.