பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசாரதேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகச் செயற் பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை இழிவு படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமை மற்றும் மத உணர்வுகளைத் தூண்டியமை ஆகிய இரண்டு குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரால் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே அவருக்கு இந்தத் தன்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஞானசாரதேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்யமுடியும். ஆனால், அதுவரையில் கொஞ் சக்காலமாவது அவர் இப்போது சிறைக்கூண்டுக்குள் தான் அடைபட்டிருக்க வேண்டும்.
2011ஆம் ஆண்டு போர் முடிந்து இரண்டு ஆண்டுகளில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் பொதுபலசேனா அமைப்பு. அதன் பொதுச் செயலராக அன்றிலிருந்து இருந்துவருபவர்தான் ஞானசாரதேரர். இந்த அமைப்பை கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைத்த காலத்திலிருந்து ஞானசாரதேரர், தமிழ் மக் களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பல குரோதக் கருத்துகளை கக்கி வந்திருக்கின்றார். தன்னைத் தீவிர சிங்கள - பெளத்த தேசியவாதியாகக் காட்டிக் கொள்வதுடன், அந்தக் கருத்தை சிங்கள மக்களிடத்தே விதைக்கும் மிகப்பெரும் கைங்கரியத்தையும் செய்து வந்தவர் அவர்.
2010ஆம் ஆண்டு கடத்தப்பட்ட கேலிச் சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத் துக்குள் வைத்து, 2016 இல் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைதாகி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் ஞானசாரதேரர். 10 மாதங்கள் வரையிலேயே அவர் சிறைத்தண்டனையை அனுபவித்தார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப் பட்டிருந்தார். அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், 'ஒரு நாடு ஒரு சட்டம்' செயலணியின் தலைவராக அவர் நியமிக் கப்பட்டிருந்தார். இவ்வாறு ஆட்சியாளர்களின் ஆசீர் வாதத்துடனேயே பௌத்த - சிங்கள பேரினவாதத் திமிரில் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களை நோக்கி விஷத்தை கக்கிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடும்.
(30.03.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.