பொருளாதாரமாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அபிவிருத்தியாக இருக்கட்டும் எந்தவொரு விடயத்திலும் உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் ஏதோவொரு வகையில் இலங்கைக்கு ஏதோவொன்றைக் கற்றுக்கொடுப்பனவாகத் தான் அமைந்திருக்கின்றன. இந்தப் பட்டியலின் இறுதி வரவாக அமைந்திருக்கின்றது பாகிஸ்தான்.
இலங்கையைப் போலவே பொருளாதாரத்தில் பலமிழந்து நலிவுற்று திவாலடைந்திருக்கின்றது பாகிஸ்தான். பொருளாதாரத்தில் பலம்பெற்று இயல்பு நிலையை அடையவேண்டுமாயின், நாணயநிதியத்தின் கடன்களே கதி என்ற நிலைமை பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. நாணயநிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் கடனுத்தரவாதங்களை நடைமுறைப்படுத்தி மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ள சமநேரத்தில், இன்னொரு மறுசீரமைப்பையும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இருந்து ஆரம்பித்திருக்கின்றார் பாகிஸ்தான் தலைமை அமைச்சரான பொஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை (பொஸ் ஷெரீப் பின் கட்சி) சேர்ந்த, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளில் பெரும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுகளை பிரதமர் பொஸ் 'கண்டிப்பாகப்' பிறப்பித்ததையடுத்து தற்போது அந்த மாற்றம் ‘கொள்கையளவில் பொதுவான திட்டமாக' ஏற்றுக்கொள்ளப்பட்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள், சிறப்பு கொடுப்பனவுகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. பிரதமர் பொஸ் ஷெரீப்பும் இதற்கு விதிவிலக்கல்லர், எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர்களுக்கோ, அரச தலைவருக்கோ ஏன் தலைமை அமைச்சருக்கோ கூட செங்கம்பள வரவேற்பு வழங்கக்கூடாது என்ற அறிவித்தலும் பாகிஸ்தானில் இறுக்கமாகப் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பொதுப்போக்குவரத்துப் பயன்பாடு மற்றும் தானியத்தில் தன்னிறைவு காணுதல் என்பன தொடர்பிலும் பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறுகிய காலத்தில் பொருளாதாரத் தளம்பல் நிலையை இல்லாமற்செய்ய வேண்டுமாயின், பல பில்லியன் டொலரை விழுங்கும் போக்குவரத்துத்துறையை பொதுப்போக்குவரத்தை நோக்கி உந்தித் தள்ளவேண்டும். அத்துடன் குறுங்காலப் பயிர்களான தானியச் செய்கையையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற புரிதலை தெளிவை, பாகிஸ்தான் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றது. ஆக, நாணயநிதியத்தின் கடன்களை, ஏற்கனவே இருந்த கடன் சுமைக்கான சுமைதாங்கியாக அல்லாமல் அதையொரு மூலதனமாகப் பயன்படுத்தக்கூடிய அத்தனை ஏதுநிலைகளையும் தலைமை அமைச்சர் பொஸ் ஷெரீப்பின் கீழ் பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கின்றது.
அரகலய போராட்டத்தின் பின்னர், இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமும் இத்தகையதே தான். ஆனால், இங்கு நடக்கும் காட்சிகளோ வேறு. பல லட்சம் ரூபா செலவில் நடத்தப்படும் நாடாளுமன்ற அமர்வுகளின் சாட்சியங்களாக இனவாதக் கருத்துகளே எஞ்சிநிற்கின்றன. அரச தலைவர், தலைமை அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்காக வழங்கப்படும் செங்கம் பள வரவேற்புகளுக்கு இலங்கையில் எந்தக் குறையும் இல்லை. இலகுவில் தன்னிறைவு காணக்கூடிய பொருள்கள் மற்றும் உற்பத்திகள் கூட இறக்குமதி என்ற மூலோபாயத்தை மையமாகக் கொண்டே சுழன்றுகொண்டிருக்கின்றன. எனில், இந்த நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு பலப்படும்? எவ்வாறு மேம்படும்? 'பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை' என்ற மனோநிலையில் உள்ள எங்கள் ஆட்சியாளர்களுக்கு பாகிஸ்தானும் இன்னொரு பாடம் தான்.
(02.04.2024-உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.