நடைபெறாத உள்ளூராட்சி தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெளியேறியமைதான் மிகப் பெரிய சோகம். இந்த வெளியேற்றத்துக்கு தமிழ் அரசுக் கட்சி காரணம் ஒன்றை தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ‘தற்போதைய உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணமாக தொழில்நுட்ப ரீதியான காரணங்களின் நிமித்தம் நாங்கள் பிரிந்து போட்டியிடுகின்றோம் ’ என்பதே அந்தக் காரணம். அதாவது இந்தத் தேர்தல் முறைமையால் பிரிந்து போட்டியிட்டால் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்பதும் தேர்தலின் பின்னர் ஒன்றிணைவதன் ஊடாக இழுபறியில்லாத ஆட்சியமைக்கலாம் என்பதும் தமிழரசுக் கட்சியின் வாதம். அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவும், தேர்தலின் பின்னர் கூட்டமைப்பாக ௭ ஒன்றாக எல்லோரும் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்பதைச் சொல்லி வருகின்றார். ஆனால் உண்மையதுவல்ல என்பது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்று தெரியும். இருந்தாலும் அவர்கள் இதனைச் சொல்லி வருகின்றனர்.
கெட்டிக்காரன் புளுகு கூட எட்டுநாளைக்குத்தான் என்பதைப்போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெளியேறியமைக்கான உண்மைக்காரணம் அவர்களது வாய்ப்பேச்சுகளாலும் செயற்பாடுகளாலும் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.கரிநாள் போராட்டத்தை மட்டக்களப்பில் தனியாக தமிழ் அரசுக் கட்சி நடத்தியது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றும்போது, தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கும்போது தமிழ் மக்களின் ஒற்றுமையை செல்வநாயகம் குலைத்து விட்டார் என்று எவரும் குற்றம் சுமத்தவில்லை என்று குறிப்பிட்டார். அன்றைய சூழலும், இன்றைய சூழலும் வெவ்வேறு என்பதை அவர் தனது வசதிக்கு ஏற்றபோல் மறைத்துவிட்டார். அதைவிட, தமிழ் அரசுக் கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த வெளியேற்றம் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியுள்ளார். தொழில்நுட்ப காரணங்களுக்காக வெளியேறினோம் என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மற்றுமொரு விடயம் இப்போது அரங்கேறியிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபைக்கான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தை நாடியும் தமிழ் அரசுக் கட்சி தோல்வியையே சந்தித்தது. இந்த நிலையில் அந்தச் சபையில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்’பினாமிக் ’கட்சியின் பெயரில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சொல்வதைப்போல, தொழில்நுட்பக் காரணங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தால், தேர்தலின் பின்னர் மீண்டும் ஒன்றாக = கூட்டமைப்பாக= ஆட்சி அமைப்பதுதான் தீர்மானம் என்றால், கரைதுறைபற்று சபைக்கான தேர்தலில் இப்படி 'பின்கதவால்' போட்டியிட்டிருக்கவேண்டியதில்லை. ஏனெனில் அந்தச் சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களை அடையாளப்படுத்துகின்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிடுகின்றது. ஒன்றில் அவர்களை வலுப்படுத்தியிருக்கலாம். இவர்கள் சொல்வதைப்போன்று தொழில்நுட்பக் காரணங்களுக்காகத்தான் தமிழ் அரசு தனித்துப் போட்டியிடுகின்றது என்றால், முஸ்லிம் காங்கிரஸின் பினாமிக் கட்சியிலுள்ளவர்கள் தேர்தலில் வென்ற பின்னர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க ஒப்பந்தத்தை செய்ய வைத்திருக்கலாம். இவற்றைவிடுத்து தாமும் அந்தத் தேர்தலில் களம்காணவேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்தபோதே, இந்தத் தேர்தலில் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஒருகாலத்தில் கொள்கைக்காகவும், மக்களுக்காகவும் உறுதியாக நின்ற ஒரு பழம்பெரும் கட்சி, இப்படி பதவிக்காக குத்துக்கரணங்கள் அடிப்பது காலத்தின் கோ லமா
lrblwo
ympglr
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.