'பட்ஜெட்' பம்மாத்து!
'பட்ஜெட்' பம்மாத்து!

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பு, கொழும்பு அடுக்குமாடிக் குடி யிருப்பில் வசிப்போருக்கு வரிவிலக்கு, மூத்தோருக்காகவும், நோயாளிகளுக்காகவும் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு சில ஆயிரங்களால் அதிகரிப்பு என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நலத்திட்டங்களுடன் பூசிமெழுகி முன்வைக்கப்பட்டிருக்கின்றது இந்தப் பாதீடு.

பொருளாதார நெருக்குவாரத்தில் வீழ்ந்திருந்த இலங்கை அதிலிருந்து மீண்டு வந்தமைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பொருளாதார உதவிகள் பிரதானமான காரணம். ஆனால், அந்த உதவிகளைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கமுடியாத 'கொள்ளை முரண்' நிலையில் நாணய நிதியம் தற்போதுள்ளது. இலங்கை தன் வரி வருமானத்தைப் பலப்படுத்தவில்லை. நிலையான - பலமான வரிக் கொள்கை இல்லாததால் வழங்கும் கடன்களைத் திரும்பிச் செலுத்தும் இயலுமையில் இலங்கை இல்லை என்பது தான் இரண்டாம் கட்டக்கடன் விடுவிப்புத் தாமதத்துக்கு சர்வதேச நாணய நிதியம் சொல்லும் காரணமாக அமைந் திருக்கின்றது. ஆதலால், இந்தப் பாதீட்டில் புதியபுதிய வரிவிதிப்புகளை ரணில் விக்கிரமசிங்க கொண்டுவருவார் என்பது எதிர்பார்த்ததே. அதற்கேற்பவே பாதீட்டை அவர் முன்வைத்துள்ளார். 'அரசாங்கம் தன் வருவாயைப் பலப் படுத்தவேண்டும், நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு- செலவுத் திட்டத் தில்பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன' என்று ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் மீண்டும் மீண்டும் தெரிவித்ததன்மூலம் அவர் இதைத்தான் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கட்டியம் செய்துள்ளார்.

ஒரு நாடு நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொள்ளவேண்டுமாயின், அது தன்னிறைவுப் பொருளாதாரத்தில் வளம்பெறவேண்டும். ஆனால், அதற்கேற்ற காத்திரமான எந்தவொரு ஒதுக்கீடும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் இல்லை. உள்நாட்டுப் பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் சிந்தனை என்ன? என்ற குறைந்தபட்சப் புரிதல்கூட 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தெளிவுபடுத்தப்படவில்லை. மாறாக நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களைப் பலப்படுத்தவேண்டும், தனியார்துறையின் உதவியுடன் உட்கட்டுமானங்களை அமைக்கவேண்டும் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து திரும்பத்திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும் மாவை, ஒரு 'மாற்றத்துக்காக' நாடாளுமன்றத்துக்கு வந்து அரைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார் ரணில்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை வடக்கு - கிழக்கு மக்களுக்கு 2024ஆம் ஆண்டில் குடிதண்ணீர் என்ற வாக்குறுதிகளையும் ரணில் வழங்கியிருக்கின்றார். ‘வேண்டாதவன் தொட்டதெல்லாம் தீண்டாதது’ என்பது போல் ரணிலின் அனைத்துத் திட்டங்களையும் விமர்சிப்பதற்கல்ல. ஆனால் இந்தத் திட்டங்கள் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டங்களில் இடம் பெறவில்லையா? என்ற சுயபரிசீலனையை 'நிதியமைச்சரான ரணில், தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை இதற்கு முன்னர் வெவ்வேறு நிதியமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற விடயம் தான். அது செயல்வடிவம் பெற்றிருந்தால், ரணிலின் பட்ஜெட்டில் அந்தப் பேச்சுக்கே இடமிருந்திருக்காது. அதே போன்றே ரணிலும் பெருந்தோட்ட மக்ககளுக்குக் காணிகளை வழங்குவார். வடக்கு - கிழக்கின் தண்ணீர் மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார் என்று இம்முறை முன்வைத்த பாதீட்டுத் திட் டங்களையே அடுத்தடுத்த வருடங்களிலும் - அவர் மீண்டும் ஜனாதிபதியானால் - முன்வைக்கவும் கூடும். பரீட்சையில் மாணவர்கள் கொப்பியடிப்பதைப் போல பாதீட்டில் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் உறுதிமொழிகளைக் கொப்பியடிக்கிறது. அவ்வளவுதான்.

srilanka

403 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.