புதியவன்
இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் இறப்புகளுக்கு வெளிப்புற காற்று மாசுபாடு காரணமாகிறது என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது.
சுவாசிக்கும் காற்று, குடிக்கும் குடிநீர் உள்ளிட்டவை மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய அத்தியாவசியமான காரணிகளாகும். ஆனால், மோசமான காற்று மாசை எற்படுத்தும் விதமாக நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும், போக்குவரத்து புகை, தொழிற்சாலை புகை உள்ளிட்டவைகள் முரணாக உள்ளது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோய் வருகிறது.
அந்தவகையில், இந்தியாவில் காற்று மாசு காரணமாக, ஆண்டுக்கு 16.7 லட்சம் பேர் இறக்கின்றனர் என்றும் ரூ.2.60 லட்சம் கோடி இழப்பீடு எற்படுகிறது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதில், நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் 29 சதவீத மரணத்திற்கு காற்று மாசுபாடே காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் காற்று மாசு காரணமாக, ஆண்டுக்கு 2.18 மில்லியன் பேர் இறக்கின்றனர் என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வில் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு உலகளவில் ஆண்டுக்கு 5.1 மில்லியன் கூடுதல் இறப்புகளுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இது 2019ம் ஆண்டில் சுற்றுப்புற (வெளிப்புற) காற்று மாசுபாட்டின் காரணமாக உலகம் முழுவதும் மதிப்பிடப்பட்ட 8.3 மில்லியன் இறப்புகளில் 61 சதவீதத்திற்கு சமம். புதைபடிவ எரிபொருட்களை சுத்தமான, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்றுவதன் மூலம் இது தவிர்க்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரியின் ஆராய்ச்சியாளர்கள் குழு, புதைபடிவ எரிபொருள் தொடர்பான காற்று மாசுபாட்டால் ஏற்படும் அனைத்து காரணங்களையும் குறிப்பிட்ட இறப்புகளையும் மதிப்பிடுவதற்கும், புதைபடிவ எரிபொருட்களை சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றும் கொள்கைகளின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை மதிப்பிடுவதற்கும் ஒரு புதிய மாதிரியைப் பயன்படுத்தியது.
2019ம் ஆண்டில், உலகளவில் 8.3 மில்லியன் இறப்புகள் சுற்றுப்புற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் (PM2.5) மற்றும் ஓசோன் (O3) ஆகியவற்றால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன. இதில் 61 சதவீதம் (5.1 மில்லியன்) புதைபடிவ எரிபொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புற காற்று மாசுபாட்டின் அனைத்து ஆதாரங்களுக்கும் காரணமான இறப்புகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா முழுவதும் மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக, சீனாவில் ஆண்டுக்கு 2.44 மில்லியன், அதைத் தொடர்ந்து இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இறப்புகளில் பெரும்பாலானவை (52 சதவீதம்) இஸ்கிமிக் என்ற இதய நோய் (30 சதவீதம்) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதுபோன்று, பக்கவாதம் (16 சதவீதம்), நுரையீரல் நோய் (16 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (6 சதவீதம்) எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஏறக்குறைய 20 சதவீதம் வரையறுக்கப்படாதவை, ஆனால், அவை உயர் இரத்த அழுத்தம், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பிய கோளாறுகளுடன் தொடர்புள்ளது என்றுள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.