[புதியவன்]
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், நாவலூர் பகுதியில் பொன்மார் வேதகிரி நகரில் ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் உடலில் தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் பொலிஸார் எரிந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர்.
அந்த இளம்பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம்பெண் மதுரை தள்ளாங்குளத்தை சேர்ந்த நந்தினி எனும் 25 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், பெருங்குடியிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் , நேற்று அந்த பெண்ணின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலர் வெற்றி என்பவர் அந்த பெண்ணை கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார் . அப்படியே நாவலூர் பகுதிக்கு அழைத்து சென்று , அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, கை, கால்களை கட்டி உடலில் தீ வைத்துள்ளான் என்பது தெரியவந்தது.
இதில் தேடப்பட்டு வந்த வெற்றி என்பவரை தாழம்பூர் பொலிஸார் கைது செய்தனர். அதன் பின்னர் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. முதலில் அந்த இளம்பெண்ணும் வெற்றி என்பவரும் பழகி வந்துள்ளனர். பின்னர் வெற்றி ஆண் அல்ல. மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததும், வெற்றியை விட்டு விலகிவிட்டார் என தெரிகிறது. இதனால் கோபமுற்ற வெற்றி, நந்தினியை அவரது பிறந்தநாளன்று பரிசு தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து அடித்து எரித்து கொன்றுள்ளான் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த மேலும் விசாரணையை தாழம்பூர் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.