மலையகப் பொங்கலும் பின்னுள்ள தந்திரமும்!
மலையகப் பொங்கலும் பின்னுள்ள தந்திரமும்!


[ஆதவன்]

நாட்டின் தேசியப் பொங்கல் விழாவை-இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்தந்தப்பகுதி மக்களின் கவனக்குவிவை ஈர்த்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தேசியப் பொங்கலை மலையகத்தில் நடத்தி. அதன்மூலம் மலையக மக்களின் மாண்பையும் பெற்றுவிடலாம் என்று அவர் மனப்பால் குடிப்பதன் விளைவே இந்த நிகழ்வுகளின் பின்னுள்ள சூட்சுமம் என்று கருத வேண்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை மக்களின் வாக்குகளில் அதீத நம்பிக்கை கொண்டவர். முதிர்ச்சிபெற்ற அரசியல்வாதியென்பதால் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளுக்கு இருக்கும் பலம் அவருக்குத் தெரியும். தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததால் தனது ஜனாதிபதிக் கனவு முன்னொரு காலத்தில் சுக்குநூறாகக் கலைந்துபோன பட்டனுபவமும் அவருக்கு உண்டு. ஆதலால், சிறுபான்மை மக்களை நோக்கிய அவரின் ஓட்டத்தை திடீர் பாசத்தை புரிந்துகொள்வ தொன்றும் அவ்வளவு சிரமத்துக்குரிய காரியமல்ல. ஆனால், அந்த மக்கள் கூட்டத்துக்காக, தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில், சதியாட்டங்களைத் தவிர வேறொன்றையும் ரணில் செய்யவில்லை என்பதே சுசப்பான மெய்.
சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரைக்கும் இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளைப் போன்று மலையக மக்களும் இந்தத் தீவில் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இனப்படுகொலைகளுக்குப் பதிலாக அவர்கள் மீது 'பொருளாதாரப் படுகொலைகள் அரசாங்கத் தாலும், அரசாங்க ஆதரவுபெற்ற 'கொம்பனிகளாலும் ஏவப்பட்டன ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவே. மற்றும்படி இரு இனக்குழுக்களும் ஆலைவாய்க்
கரும்பாக நெரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது 'பொதுமைப்பாடே!

ஓர் உழைப்பாளியின் வியர்வை உலர்ந்துபோவதற்குள் அவனுக்கான ஊதியத்தை வழங்கிவிடவேண்டும்' என்கின்றது விவிலியம். விவிலியம் மட்டுமல்ல உலகிலுள்ள அநேகமான மறைநூல்களும் அறநூல்களும் இதைத்தான் பறைசாற்றுகின்றன. ஆனால் இந்தச் சித்தாந்தத்துக்கும் மலையக மக்களின் வாழ்வியலுக்கும் கிஞ்சித்தும் பொருத்தமில்லை. ஆயிரம் ரூபா ஊதியத்தை வழங்குமாறு நெடுகாலமாக மலையக மக்கள் (தோட்டத்தொழிலாளர்கள்) போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கை இன்னமும் செவிசாய்க்கப்படவில்லை. 2020களில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த பொருளாதார இயலுமையில் நாடு இப்போதில்லை. விலையேற் றங்கள் இடியாக இறங்கிக்கொண்டிருக்கின்றன. வற் வரியும் தன் பங்குக்கு வதைக்க ஆரம்பித்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ரூபா ஊதியக்கோரிக்கை கூட இன்னமும் மெய்ப்பட்டபாடில்லை. இவ்வாறிருக்கையில் இந்தத் 'தேசியப் பொங்கல்'தான் மலையக மக்களின் எதிர்பார்ப்பா? என்ற கேள் வியை, பொதுப்புரிதலை - ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் குருதியை அட்டைகள் மட்டும் உறிஞ்சவில்லை. அட்டைகளுடன் போட்டிபோட்டு பெருந்தோட்டக் 'கொம்பனிகளும் 'காலாகாலம் மாறிமாறி ஆட்சிக்குவரும் பேரினவாத அரசுகளும்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறிருக்கையில், தேசியப் பொங்கலை அல்லாமல், 'தேசிய இனமாக' அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வுரிமையையும், தமக்கேற்ற ஊதியத்தையும்தான் மலையக மக்கள் ரணில் அரசிடம் எதிர்பார்க்கின்றார்கள். இவை நிறைவேற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் எந்தப் பொங்கலும் அவர்களுக்குத் தித்திக்கப்போவதில்லை. [எ]
 

421 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.