ஆதவன்.
ஒரு நாட்டின் நல்லாட்சிக்கும், அங்கீகாரத்துக்கும் சட்டவாட்சி சீராக நடக்கவேண்டும். நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். சட்டவாட்சி ஒழுங்கான முறையில் கடைப்பிடிக்கப்படாவிட்டால், சீராகச் செயற்படுத்தப்படாவிட்டால் அங்கு ஒரு குழப்ப நிலைமை தொடர்ந்துகொண்டே இருக்கும். இலங்கையின் நிலைமையும் அதுதான்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சட்டம் பெரும் பான்மையினத்தவர்களுக்கு ஒரு வகையாகவும், சிறு பான்மையினருக்கு ஒருவகையாகவும் நடை முறைப்படுத்தப்படுகின்றது என்பது கண்கூடு. ஆட்சியில் இருப்பவர்கள் அதை மறுத்தாலும் குருந்தூர் மலை விவகாரம் முதல் இப்போது மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை விவகாரம் என அண்மையகால உதாரணங்கள் ஏராளம் இருக்கின்றன. குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்ட விவகாரத்திலும், மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்திலும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன. நீதிமன்றக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் மௌனமாக வேடிக்கை பார்க்கின்றனர். நீதிமன்றக் கட்டளைகளை உதாசீனம் செய்த பெரும்பான்மையினத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பான சிறுபான்மையினர் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோயிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, 'நீதிமன்றக் கட்டளைகளை எவராவது மதிக்காவிட்டால் அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றது, அதனால் சட்ட நடவடிக்கையில் பாரபட்சம் என்பதை ஏற்கமுடியாது' என்று கூறியிருக்கின்றார். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையீனமே பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கூறுவது உண்மையே. நீதிமன்றக் கட்டளை களை மீறினால் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் உண்மையே. ஆனால் அத்தகைய நீதிமன்ற உத்தரவு கள் அரசாங்கத்தாலும், அரச ஆதரவு பெற்றவர்களாலும் சர்வசாதாரணமாகத் தூக்கியெறியப்படுவது தான் இங்குள்ள பிரச்சினை என்பதை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச போன்ற பெரும்பான்மையின அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
சிறுபான்மையின மக்கள் தங்கள் இறுதி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்களின் மீதுகூட இப்போது அவநம்பிக்கை கொள்ளும் நிலைமையே இருக்கின்றது. தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடியும் மாற்றம் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்ற எண்ணம் சிறுபான்மை மக்களின் மனங்களில் ஆழப்பதிய ஆரம்பித்திருக்கின்றது. நீதிமன்றக் கட்டளையை மீறுவோர் தண்டிக்கப்படவில்லை என்றால், அதற்கானகாரணம் என்ன? இந்தக் கேள்விக்கான விடைகளையும் தீர்வுகளையும் தேடினால் மட்டுமே நீதியமைச்சர் விஜயதாஸ கூறும் 'ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளும் சூழல்' உருவாகும். துரதிர்ஷ்டவசமாக தெற்கு அரசியல்தலைவர்கள் எவரும் இதற்கு விடைதேடி - தீர்வைக்காண முயலவில்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டித் தப்பிக்கொள்ளும் மனப்பாங்கைக்களைந்து எப்போது அடிப்படைப் பிரச்சினையை இனங்கண்டு தீர்வுதேட முயல்கின்றார்களோ, அப்போதே நாட்டில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் தீர்ந்துபோகும். அதுவரை இந்தநாட்டில் குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.