[ஆதவன்]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வேண்டிய கட்டாய நிலைமை தொடர்பில் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தெளிவுபடுத்தியிருக்கின்றார். உயிருக்கே ஆபத்தை விளை விக்கக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் சாந்தன் அவதியுற்று வரும் நிலையில், இந்தியாவின் வேலூர்ச் சிறையில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் திருப்தியில்லை என்றும் ஆதலால் அவருடைய சிகிச்சைகளைக் கருத்திற் கொண்டேனும் இலங்கைக்கு அவரை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தன் கடிதங்களில் வலியுறுத்தியிருக்கின்றார் அவர்.
இந்த வழக்கில் கைதான ஏழு பேரில், முருகன், சாந்தன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்திய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவந்து அனைவரையும் விடுவித்துள்ள போதிலும், இலங்கையைச் சேர்ந்தோரின் நிலைமை 'சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்ததைப் போன்றதே. கைதிகளாகச் சிறையிடப்பட்டிருந்த காலத்தை விடவும் தற்போது மோசமான முறையில் தாம் நடத்தப்படுவதாக அண்மையில் சாந்தன் ஒரு கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். முன்னராவது, வாசிப்பதற்குப் புத்தகங்கள், நடைபயணத்துக்கு 'மூடப்பட்ட பரந்த வெளிகள்' என்றிருந்த (சிறை) வாழ்வு இப்போது ஒற்றைச் சிற்றறைக்குள் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. தனிமைச் சிறைகளுக்குள் அவர்கள் உழல்கின்றனர். கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அல்லது அறவே இல்லாம லாக்கப்பட்டிருக்கின்றது. ஆக, விடுதலை என்ற பெயரில் இருந்ததையும் இழந்த கதையாகத்தான் மேற்படி வழக்கில் தொடர்புபட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலைமை ஆகியுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்தோரின் பிரதிநிதியாக சாந்தனின் தாயாருடைய வலியுறுத்தல் அமைந்திருக்கின்றது என்றும் கொள்ளலாம்.
விடுதலையின் பின்னரான' நீண்ட சட்டப்போராட்டத்தின் முதல் படிநிலையை இவர்கள் இந்தியாவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த நால்வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று வழக்கு விசாரணைகளில் தெரிவித்துள்ளபோதிலும், அது சார்ந்த எந்த ஆவணங்களையும் இதுவரை அவர்கள் முன்வைக்கவில்லை. ‘சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்' என்ற பொதுவான மற்றொருபார்வையும் அவர்கள் மீது இருந்தே வந்திருக்கின்றது. ஆதலால், இந்தியாவுக்குள் பிரவேசித்த சட்டவிரோத நுழைவைக் காரணமாகக் காட்டி, அதன் கீழான சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்கள் அணுகப்படுவார்கள். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வருந்தத் தக்க சம்பவமும் அதுவேதான். அதனால்தான் விடுதலையின் பின்னரும் வேலூர் சிறையே அவர்களுக்குக் கதியென்றாகியிருக்கின்றது. [எ]
மறதி ஒரு தேசிய வியாதியென்பர். தமிழ்த் தேசிய இனத் துக்கு அந்த வியாதி ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிகம்தான். இந்திய உச்சநீதிமன்றம் இவர்களை விடுவித்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக எத்தகைய வலியுறுத்தல்களை இங்குள்ள தமிழ்த் தலைமைகள் செய்தன? என்ற கேள்வி எழாமலில்லை. உண்மையில் தூதரக ரீதியில் அணுகப்பட வேண்டிய விடயமிது. ஆனால், இந்த விடயத்தில் தூதகர உறவுகள் மௌ னித்தே இருக்கின்றன. எவரும் மூச்சுக்கூட விட்டதாயில்லை. தமிழ்த் தலைமைகளிடம் தவறு என்று பொத்தாம் பொது வாக விரல் நீட்டிவிடவும் முடியாது. ஏனெனில், முருகன், சாந்தன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களும் கனதியான போராட்டமொன்றை நடத்தி யதாகவில்லை.
அத்துடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் காக்கின்ற மௌனம்கூட வேதனையானதே. இந்த வழக்கில் ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்ற பாகுபாடு காட்டப்படக்கூடாது. அனைவரும் தமிழர்கள். அனைவரும் 30 ஆண்டுகளுக்கும் மேல் தம் வாழ்வை சிறையில் செலவிட்டுள்ளனர். எனவே, நான்கு இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் தாயகம் நோக்கி அனுப்பிவைக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழகத் தலைவர்களுக்கும் உண்டு. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.