(ஆதவன்)
இலங்கை அரசாங்கம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றியிருக்கும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான குரல்களை அடக்கவே இந்தச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் அவசர அவசரமாகக் கொண்டுவந்திருக்கின்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதேநேரம், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலும் என்றும் சர்வதேச மட்டங்களில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. நிகழ்நிலைக் காப்புச்சட்டம் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும், சிறுவர் - பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன. இலங்கையில் அனைவருக்கும் சமமாகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ள நிலையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பழிவாங்கல் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் மேலோங்கவே செய்கின்றது.
நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தின் அடிப்படையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஐவர் கொண்ட ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. அதிக அதிகாரங்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு எதிராக எந்தவித சிவில் அல்லது குற்றவியல் வழக்கையும் பதிவு செய்யமுடியாது. விடயத்தை உகந்த நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதிக அதிகாரங்களைக் கொண்ட-அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள் எவ்வாறானவையாக இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறிவிடமுடியாது.
மக்கள் போராட்டத்தால் ராஜபக்ச ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், அரச தலைவர் கதிரையைப் பற்றிக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க அதன்பின்னர் மக்கள் போராட்டங்களை - எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டே அடக்கியிருந்தார். எதிர்ப்புப் போராட்டங்கள் படைப்பலத்தைப் பிரயோகித்து அடக்கப்பட்டதுடன், போராட்டங்களை ஒழுங்கமைத்த சிலர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டமும் பாய்ந்திருந்தது. 1979 ஆம் ஆண்டு 6 மாதங்களுக்குத் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் இந்த நாடு கண்டிருக்கின்றது தற்போது பெரும்பான்மையின மக்களும் அதை உணர்கின்றனர். இந்தக் கடந்தகால அனுபவங்களே எதிர்காலத்தில் நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தும் என்ற கேள்வியையும் - அரசாங்கம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் முனைப்பில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை - சட்டத்தின் மீது நாட்டிலும், சர்வ தேசத்திலும் எழுந்துள்ள சந்தேகங்களைக் களைய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதைச் செய்யாமல் சர்வாதிகாரப்போக்குடன் அரசாங்கம் செயற்பட முயன்றால் அது பாரதூரமான விளைவுகளையே உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும். ஆனால் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டு - பதவியைத் தக்கவைத்திருக்கும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவற்றையெல்லாம் கருத்தில் எடுப்பாரா என்பது சந்தேகம்தான்
(31.01.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.