டில்லி 'விசிட்' தொடர்பில் ஜே.வி.பி. கருத்து!
(ஆதவன்)
சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றிப் பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்தியப் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்க மாட்டோம் என்பதை நாம் கூறினோம் - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் இந்தியப்பயணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
"இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின் போது அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் பற்றிப் பேசப்பட்டாலும் பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பூகோள அரசியல் போட்டியால் பிராந்தியப் பாதுகாப்புக்கு சில அச்சுறுத்தல்கள் உள்ளன. இது தொடர்பில் அவர்கள் தரப்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. எமது நாட்டின் இறைமையைப் பாதுகாத்துக் கொண்டு, பிராந்தியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என நாம் கூறினோம். எமது நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பை நாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டுப் பாதுகாப்புக்குப் பிராந்திய பாதுகாப்பும் மிக முக்கியமானது.
இந்த நிலைப்பாட்டில் இருந்தே நாம் செயற்படுவோம். சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. நாமும் அது பற்றிப் பேசவில்லை. பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்ற விடயத்தைக் கூறினோம் - என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.