மீன்களுக்கே எல்லையில்லை!
மீன்களுக்கே எல்லையில்லை!

(ஆதவன்)

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, இந்த வருடத்தில் மட்டும் இது விடயமாகக் குறைந்தது ஐந்து கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றார் அவர். ம.தி.மு.க.வின் தலைவர் வைகோ, பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ், அதன் பிரதானியான அன்புமணி என தமிழகத் தலைவர்கள் பலர், இதுவரை குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்வது தொடர்பில் மோடிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இலங்கைக் கடற்படை தங்களின் மீனவர்களை அத்து மீறியவகையிலும் அராஜகமாகவும் கைதுசெய்கின்றது என்பதை பொதுமைப்பாடாக ஏற்றே, அவர்கள் தங்களின் கடிதங்களை அமைத்துள்ளனர்- அனுப்பியுள்ளனர்.ஆக இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை 'பிரச்சினையின் பின்னணியை பிறிதொரு தளத்தில் நின்று அதுவும் ஈழத்தமிழர்களின் தளத்தில் நின்று சிந்திப்பதற்குக்கூட அவர்கள் தவறியிருக்கின்றனர். உண்மையில் மன வருத்தத்துக்குரிய விடயமாகவும் 'பெரும் அபத்தமாகவும் தமிழகத் தலைவர்களின் கடிதங்களும் அந்தக் கடிதங்களின் பின்னாலுள்ள சிந்தனைத் தளங்களும் தான் அமைந்திருக்கின்றனவே அன்றி.அதைத்தாண்டி இலங்கைக்கடற்படையினரையோ அல்லது ஈழ மீனவர்களையோ நொந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

சோழத்தவனும், ஈழத்தவனும் ஒருதாயின் இரு மகவுகள் தான். 'தாயும் பிள்ளையுமாக இருந்தாலேயே வாயும் வயிறும் வேறு' எனும்போது, அந்தக் கொள்கையில் ஈழத்தவனுக்கும் சோழத்தவனுக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. 30 ஆண்டு காலமாக போர் தின்று தீர்த்த வடக்கு மாகாண மீனவர்களின் பொருளாதாரம் போரின் பின்னரேயே மெல்லத் தலைதூக்க எத்தனித்தது. ஆனால், தற்போது அந்தச் சிறு பொருளாதார ஈட்டுகைக்கான வாய்ப்புகளையும் இல்லாது செய்வதில் தமிழக மீனவர்கள் அத்தனை ஆர்வமுள்ளவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலநாள் படகுகளில் தடை செய்யப்பட்ட இழுவைமடிகளைப் பயன்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் 'மீன் வேட்டையால்' நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மரணப் படுக்கையை நோக்கியே நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. இழுவை மடிகளாலும், றோலர் படகுகளாலும் அறுத்தெறியப்படும் வலைகளும், அடித்துடைக்கப்படும் படகுகளும், இழக்கப்படும் சொத்துகளும் மில்லியன் ரூபா பெறுமதியானவை.

உண்மை நிலை இவ்வாறிருக்கையில்; இலங்கைக் கடற்படை இந்தியக் கடலோரக் காவற்படையைத் தாண்டிச்சென்று தமிழக மீனவர்களை இழுத்துப்பிடித்துக் கைது செய்து வருவதுபோன்ற தோற்றப்பாட்டில் கருத்து வெளியிடுவதையும் கடிதங்கள் எழுதுவதையும் தமிழகத் தலைவர்கள் முதலில் தவிர்த்துக்கொள்ளவேண்டும். தமிழகத் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மதிக்கின்றார்கள் என்றால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பெருவிருப்புக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், கடந்த ஒன்றரைத் தசாப்தங்களாக நிலவுகின்ற இந்தக் கடற்பதற்றத்தை' உள்ளது உள்ளபடியாக அணுகி நியாயமான தீர்வொன்றைத் தேடுவதற்கு அவர்கள் முற்படவேண்டும். ஆனால், நியாயமான தீர்வுகளைத் தேடுவதற்கான செயற்பாடுகளுக்கும், தமிழகத் தலைவர்களின் கடிதங்கள் சொல்லி நிற்கும் கருத்துக்கள் மற்றும் அவற்றின் தோரணைகளுக்கும் கிஞ்சித்தேனும் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மீன்களுக்குத்தான் எல்லையில்லை. மீனவர்களுக்கு அது உண்டு அளவு கடந்தால் அமிர்தமே நஞ்சாகும் போது ஆழ்கடல் மீன்பிடிமட்டும் விலக்கா என்ன.. (ஏ) 

(12.02.2024 உதயன் பத்திரிகை)

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

375 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.