(ஆதவன்)
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமனானது. இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போல ஒரு தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 10 பேருக்கு இரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பிட்டிருக்கிறார் கண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷிரானிவிஜயசேகர. வரவேற்கத்தக்க, வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பே இது. ஆனால் பிரச்சினை என்னவெனில் குற்றம் நடந்து 13 வருடங்களுக்குப் பின்னரே இந்தத் தீர்ப்பு வெளிவந்தமையால் பலராலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது என்பதே யதார்த்தம்.
2011ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குச்சென்ற புகுமுக மாணவர் ஒருவர் மீது 10 பேர் கொண்ட சிரேஷ்ட மாணவர் கும்பல் ஒன்று அதீத பகிடிவதையை மேற்கொண்டது. அம்பாந்தோட்டையைச் சேர்ந்த வறிய குடும்பத்தில் இருந்த அந்த மாணவனுக்கு பல்கலைக்கழகச் சூழல் மிகப்புதிது. அத்தோடு மிகப் பயந்த சுபாவமும் கொண்டவன். அதை வைத்துத் தங்கள் வக்கிரத்தை சிரேஷ்டமாணவர் கும்பல் தீர்த்துக்கொண்டது. மாணவிகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் நிலத்திலே உணவைக் கொட்டிவிட்டு, அதனை நாய்போல கைகளைப் பயன் படுத்தாமல்வாயால் உண்ணச் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அந்த மாணவனை நிர்வாணமாக்கி, சிரேஷ்ட ஆண்மாணவர்கள் சிலரோடு பலவந்த ஓரினச் சேர்க்கைக்கும் உட்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அந்த மாணவன் மறுக்கவே தங்களது விடுதிக் கூரையில் அவனைக் கட்டித் தொங்கவிட்டு அடித்திருக்கிறார்கள். இந்தப் பகிடிவதை தாங்கமுடியாமல் அந்த மாணவன் உயிர் மாய்க்கவும் முயன்றிருக்கிறான். அதன் பின்னரும் அந்தப் பகிடிவதைக் கும்பல் அவனை விடவில்லை. அடித்துக் காயப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் காயங்களுக்கு அவன் சிகிச்சைபெறச் சென்றபோது, 'தவறுதலாக நிலத்தில் விழுந்தமையாலேயே காயங்கள் ஏற்பட்டன என்று மருத்துவரிடம் சொல்லவேண்டும். இல்லாவிட் டால் கொன்றுவிடுவோம்' எனவும் மிரட்டியிருக்கிறார் கள். ஆனால் தொடர்ச்சியாக அந்த மாணவன் ஒரேமாதிரியான காயங்களோடு வந்ததால், மருத்துவருக்குச் சந்தேகம் வந்து, மாணவனைத் தீரவிசாரித்திருக்கிறார். அதன்போதே உண்மை வெளிவந்து, பகிடிவதை புரிந்தோர் கண்டறியப்பட்டு, கைதானார்கள். ஆனாலும் வழக்கு உடனடியாக முடியவில்லை. பல தவணைகளாக இழுபட்டு, குற்றம் நிகழ்ந்து 13 வருடங்களின் பின்னர், குறித்த சம்பவம் ஆறிய கஞ்சியாக எல்லோராலும் மறக்கப்பட்டு அதன் முக்கியத்துவம் இழக்கப்பட்ட நிலையிலேயே, இப்போது இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு பகிடிவதை நடந்த 2011 ஆம் ஆண்டோ அல்லது அதற்கடுத்த வருடமோ சூட்டோடு சூடாக வந்திருந்தால், இலங்கையின் பல்கலைக்கழக வரலாற்றையே மாற்றியமைத்திருக்கும். பகிடிவதைக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்ற பயத்திலேயே பல பகிடிவதைகள் இல்லாமலேயே போயிருக்கும். ஆனால் காலங்கடந்து வந்த தீர்ப்பு பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறிவிட்டது. எனினும் காலங்கடந்தாலும், பகிடிவதைக் குற்றத்தில் இருந்து எவரும் தப்பமுடியாது என்ற உண் மையை இந்தத் தீர்ப்பு உரக்கச் சொல்லியிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. குறித்த பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் இப்போது பட்டப்படிப்பையும் முடித்து அரசபணிகளில் இருக்கிறார்கள். அதிலும் சிலர் உயர்பத விகளையும் வகிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வந்திருக்கும் இந்தத் தீர்ப்பால் அவர்கள் தங்கள் பணியையும் இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 'பகிடிவதைக் குற்றவாளிகள்' என அடையாளப்படுத்தப்பட்டதால், இனிமேல் அவர்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் தலை நிமிர்ந்து நடக்கவும் முடியாது. இந்தத் தீர்ப்பு பகிடி வதையில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக அமையட்டும். எத்தனை வருடங்கள் கழிந்தாலும், ஊழ்வினை வந்து உறுத்தும் என்ற பயம் இருந்தால், பகிடிவதைகளும் தானே குறைந்துவிடும். (ஏ)
(14.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.