(ஆதவன்)
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த வருடம் 91 சிறுமிகள், குழந்தைகளைப் பிரசவித்திருக்கின்றனர். வடக்கின் இதர மருத்துவமனைகள் மற்றும் தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை அச்சப்படக்கூடிய வகையில் இன்னு மின்னும் அதிகமாயிருக்கும். இளவயதுக் கர்ப்பங்கள் எனப்படுபவை சமூகச் சீர்கேடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்காலத்தையே இல்லாமற் செய்யக்கூடியன என்ற வகையில், இந்தத் தகவல்களும் புள்ளிவிவரங்களும் அதிக அபாயம் மிக்கன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியான சமகாலத்தில் மன்னாரில் பத்துவயதுச் சிறுமியொருத்தி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். இவையெல்லாமே நம் இளைய சந்ததி குறித்த அச்சத்தையும், சமூகம் மீதான் வெறுப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் துர்நடத்தைகள் தொடர்பில் தேசியரீதியிலான கருத்தாடலொன்று கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வுக் கல்வியை வழங்கும் 'செயற்பாட்டு நடவடிக்கைகளில்" இறங்கியது அரசாங்கம். வெறும் 'பேச்சுக் கல்வியாக' அல்லாமல் பாடப்புத்தகங்களில் ஒரு கற்கைநெறியாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், அதற்கு மேலதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தைத்திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் நபர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின் அடைவு மட்டத்தினதும், அதன் செயற்பாட்டுத் தளத்தினதும் தோல்வியையே இளவயதுக் கர்ப்பங்கள் தொடர்பான தகவல்களும், தொடர்ச்சியாக குழந்தைகளைப் பின் தொடரும் காமுகர்களின் அரக்கத்தனங்களும் கட்டியம் செய்கின்றன.
ஒரு குழந்தை, அதன் ஐந்து வயது வரைக்கும், பெற்றோரினதும் உற்றோரினதும் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும்தான் கூடுதலான நேரங்களைச் செலவிடுகின்றது. பாடசாலைக்காகப் புறப்பட்ட பின்னர் மூன்றாம் தரப்பு நபர்களுடனான பழக்கத்தை உருவாக்கவேண்டிய கட்டாயமும் தவிர்க்கமுடியாத்தனமும் அந்தக் குழந்தைக்கு ஏற்படுகின்றது. இதனால் பள்ளிப்பருவத்தின் ஆரம்ப நாள்களிலேயே அந்தக் குழந்தைக்கு நல்ல தொடுகை தொடர் பிலும், தவறான தொடுகை தொடர்பிலும் முடியுமான வரையிலான தெளிவூட்டல்களை விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் கடமையாகும். அதற்காக, இதுவரை இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தன என்றோ அல்லது சிந்தனை வரட்சி மிக்கதாக இருந்தன என்றோ பொருளல்ல. பேச்சு வழக்கில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களுக்கும், பாடப்புத்தகமாக கற்றல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களுக்கும் இடையில் ஆகப்பெரும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. இந்த இரண்டாம் நிலை நடவடிக்கைகள் மிக இலகுவாக மாணவர்களைச் சென்றடைய வல்லவை. இங்கு விடயமும் அதுதான்.
பொருளாதாரப் பின்னடைவைக் காரணம்காட்டி, இந்த நல்ல திட்டத்தை பூர்வாங்க நடவடிக்கைகளுடன் அரசாங்கம் கைவிட்டுவிடாமல், போர்க்கால அடிப்படையில் இது செயலுருப்பெற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இதே வேளை-இது அரசாங்கத்துக்கோ அல்லது வண்டும். இந்கோவாட்டு இது ஆசிரியர்களுக்கோ மட்டுமான பணியுமல்ல. பிள்ளைகளின் நடத்தைக்கோலங்களில் கூடுதலான அக்கறைகொண்ட வர்களாக பெற்றோரும் இருக்கவேண்டும். வகுப்பறையில் பத்துடன் பதினொன்றாக ஒரு பிள்ளையை ஆசிரியர் கண் காணிப்பதற்கும், வீட்டில் அந்தப் பிள்ளை ஏக கண்காணிப்பில் இருப்பதற்கும் இடையே மலைக்கும் மடுவுக் கும் இடையிலான வேறுபாடுகள். உள்ளன. இந்தப் பொறுப்புணர்வை பெற்றோர் வரித்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாமும் சேர்ந்த கூட்டொருங்கிய செயற்பாடுதான் பிள்ளைச் செல்வங்களின் நாளைய வளமான எதிர்காலமும் இருப்புமாகும்...!
(19.02.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.