[ஆதவன்]
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய உட்கட்சிப்பூசல் 'தலைவர் தெரிவு' என்னும் விடயத்தால் பொதுவெளிக்கு வந்துவிட்டது. சிறீதரன் அணி, சுமந்திரன் அணி, மாவை அணி, நடுநிலைஅணி என்று ஏகப்பட்ட அணிகள் ஒரு கட்சிக்குள்ளேயே இருந்து அல்லாடு வதையும், சமூகவலைத்தளங்களில் வசைமாரி பொழிவதையும் தமிழ்மக்கள் சகித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த மோதல்களையும், முரண்பாடுகளையும் தனியே ஒருகட்சியின் பிரச்சினையாகத் தமிழ்மக்கள் கடந்து செல்லமுடியாத நிலையை காலம் உருவாக்கிவிட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளால், தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியல் பயணத்துக்கென உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. இதில் பல தமிழ்க்கட்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், தமிழரசுக் கட்சி என்ற அச்சாணியை மையமாகக்கொண்டே கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் ஆனந்தசங்கரியின் விலகலோடு, தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தை கூட்டமைப்பு தனதாக்கிக் கொண்டது. தமிழ் மக்களின் மனதில் வீட்டுச்சின்னம் விடுதலையின் சின்னமாக மாறியது. வீட்டுக்குப் போடும் வாக்குகளெல்லாம் தமது விடிவுக்கானது என்று அவர்களும் நம்பினர். புலிகள் இருக்கும் வரையில் நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால், உடையவன் இல் லாவிட்டால் ஒருமுழம்கட்டை என்பதைப்போல, புலிகளின் காலத்துக்குப்பிறகு கூட்டமைப்பின் நடவடிக்கையில் பெரும்மாற்றங்கள் உண்டாயின. திட்ட மிட்ட புலிநீக்க அரசியலும், தமிழ்த் தேசிய விரோதப் போக்கும் கூட்டமைப்புக்குள்ளும், அதன் அச்சாணியான தமிழரசுக் கட்சிக்குள்ளும் மேலெழத் தொடங்கின. கூட்டமைப்பில் இருந்து ஒவ்வொரு கட்சியாக விலகத் தொடங்கின அல்லது விலகும் முடிவினை எடுக்கவேண்டிய சூழலுக்குள் தமிழரசுக் கட்சியின் போக்கால் உதிரிக் கட்சிகள் தள்ளப்பட்டன. இப்போது எல்லாக் கட்சிகளும் விலகிவிட, தமிழரசுக் கட்சியும் வீட்டுச் சின்னமும் மட் டும் தனித்து நிற்கின்றன. கூடவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியும் அவரோகணமாக வீழ்ந்து கிடக்கிறது.
இத்தகைய இக்கட்டான நிலையில்தான் கட்சியின் புதிய தலைவராக வருவதற்கு மும்முனைப் போட்டி உருவானது. உண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சீ.யோகேஸ்வரன், இந்தத் தெரிவுக்கு தன் பெயரையும் சமர்ப்பித்திருந்தாலும், அவர் தேர்தலுக்கு முன்னர் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே அதிக சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் சிறீதரன் - சுமந்திரன் இடையேதான் அடுத்த தலைவர் யார் என்பதில் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இருவருமே வெவ்வேறான குணவியல்புகளையும், கொள்கைகளையும் கொண்ட வர்கள். அதனால் அவர்களின் ஆதரவாளர்களும் அதே நிலைப்பட்டு -பிளவுண்டு இப்போது சமூக வலைத் தளங்களிலும் மாறிமாறி வசைபாடல்களை ஆரம்பித்து விட்டனர். இந்த வசைபாடல்கள் தலைவர் தெரிவுக்குப் பின்னர் இன்னும் வலுப்பெறும் அபாயமுண்டு. பங்காளிக் கட்சிகளால் கைவிடப்பட்டு தனிமரமாகியுள்ள தமிழரசுக் கட்சி இந்தத் தலைவர் தெரிவால் தனக்குள் இன்னும் சில கூறுகளாகப் பிளவடையும் வாய்ப்புகளே அதிகம். என்னதான் வெளிப்பார்வைக்கு புன்னகைகளால் சந்தித்துக்கொண்டாலும், தேர்தலுக்குப் பின்னர் இரு தரப்பினரும் மற்றைய தரப்பின் காலை வாருவதிலும், தம்முடைய செல்வாக்கை அதிகரிப்பதிலும கவனத்தைச் செலுத்துவர். இது நிரந்தரமான பிளவுக்கும் வழி கோலி விடும். இத்தகைய பிளவுகள், தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கையீனத்தையும், வெறுப்பையும் மக்களிடம் உண்டு பண்ணி, இப்போதிருக்கும் வாக்கு வங்கியைக்கூட இல்லாதாக்கிவிடும். ஒரு இனத்தின் அரசியல் அடையாள மாக விளங்கிய, தந்தை செல்வாவின் உயிர் மூச்சில் உருவான கட்சி இப்படி ஒரு தலைமைத்துவப் போட்டி யால் கண்முன்னே அழிவடைவதைக் காணவேண்டு மென்பதுதான் தமிழ் மக்களின் விதியோ...? [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.