[புதியவன்]
சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடக்கோரி தொடர்ந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து தமிழக அரசு ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது. அதன்படி, சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் நீதிமன்றத்திடம் உள்ளன. இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழ்நாடு அரசிடமே ஒப்படைப்பது நல்லது என்றும் நகைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது எனவும் நீதிபதி கூறியுள்ளார். அதன்படி, தற்போது நீதிமன்ற பொறுப்பில் கருவூலத்தில் உள்ள நகைகளை தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அதிகாரிகள் நகைகளை பார்வையிட்டு பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெயலலிதாவின் சொத்து வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கான செலவு கட்டணம் ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையுடன், தமிழக உள்துறை செயலாளர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையா சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.