இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது வீட்டில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால், தனது தந்தையின் தங்கையினது வீட்டுக்கு சென்று மாணவி உறங்குவது வழக்கமாகும்.
இந்நிலையில்,கடந்த வியாழக்கிழமை (20) இரவு 10 மணியளவில் உறங்கச்சென்ற மாணவி (21) அதிகாலை நித்திரை கொண்டிருந்த தனது அத்தையை எழுப்பி, தண்ணீர் கேட்டு, அருந்திவிட்டு, மீண்டும் தூங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் அத்தையும் வீட்டாரும் நித்திரை விட்டெழுந்து மாணவியை பார்த்தபோது, அவர் வெறுந்தரையில் இருந்துள்ளார். அதனையடுத்து, உடனடியாக மாணவியை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் முன்கூட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவியின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான விசேட வைத்திய நிபுணர் விடுமுறையில் இருப்பதனால் இதுவரை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் , மாணவியின் உடல் உறவினர்களிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.