(ஆதவன்)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுமத்தப்பட்டது.
போரின் தோல்வி, மக்களின் அவலம், ராஜபக்சக்களின் அச்சுறுத்தல் என்று எல்லாப்பக்கமும் நெருக்குவாரமாக இருந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஒழுங்குக்குள் இருந்தது.
ஆனால் அவையெல்லாம் சிறிது காலம் தான். எப்போது அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அந்தக் கட்சி எடுத்ததோ அன்றிலிருந்து சரிவு ஆரம்பித்தது. உடைவுகள் தொடங்கின. அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் அடிக்கடி நிகழத் தொடங்கின.
கஜேந்திரகுமார் வெளியேற்றம் அந்த முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாக இருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்க்காங்கிரஸ் என 5 கட்சிகளின் கூட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது வெளிப்படை.
இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான கொள்கை முடிவுகளை முன்வைக்கத் தொடங்கினர். கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தனோ, ஜனநாயகக் கட்சி என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்று சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அது கூட்டமைப்பின் உடைவுக்கான அத்திபாரம் என்பதை அவர் மூடி மறைத்துக் கொண்டிருந்தார். இப்போதும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் நடப்பது அது தான். அந்தக் கட்சியின் தலைமைக்கு எப்போது இருவர் போட்டியிடப் போகின்றனர் என்பது உறுதியானதோ அப்போதே அந்தக் கட்சிக்குள் பிளவு - உடைவு - ஆரம்பித்து விட்டது. தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட இருவரும், இது ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளே நீறு பூத்த நெருப்பாக பிளவு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தமையும் அவர்கள் இருவருக்கும் தெரியும்.
இருவரின் ஆதரவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியோர் இந்தப் பிளவை கூர்மைப்படுத்திக் கொண்டேயிருந்தனர். தலைவர் தெரிவுக்கான தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களைச் சந்தித்த போது, தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரன், "இருவரும் இணைந்து பணியாற்றுவோம்" எனக்குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், உண்மையில் அவர் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதையே அதன் பின்னர் இடம்பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது அவரது கருத்து பிரதி பலித்திருந்தது.
கட்சியில் உள்ள இரு அணிகளும் ஒன்றாக வேண்டுமாக இருந்தால் எனக்கு பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டால் தான் அது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் ஊடாக கட்சியில் இரு அணிகள் இருக்கின்றன என்பதையும் அது தலைவர் தேர்தல் ஊடாகவே உருவானது என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். (ஏ)
(17.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.